தமிழகத்தில் வருமானவரி சோதனை... அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கும் வருமானவரி சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

Jayakumar

இது குறித்து டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வருமானவரித்துறை அதிகாரிகள், தங்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்காணித்து, அதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வருமான வரி சோதனையை நடத்துவது வழக்கம்.

அதன்படி, தற்போது வருமானவரி சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் ஒப்பந்ததாரர்கள் அனைவரும், பொதுப்பணித்துறையிலோ, நெடுஞ்சாலைத் துறையிலோ, சுகாதாரத்துறையிலோ மற்ற துறைகளிலோ இப்போது ஒப்பந்தம் பதிவு செய்து கொண்டு ஒப்பந்ததாரர்கள் ஆகவில்லை. மாறாக, கடந்த 25 ஆண்டு காலமாக ஒப்பந்ததாரர்களாக இருந்து வருகின்றனர். அதிலும், திமுக ஆட்சியில் பத்தாயிரம் கோடி ரூபாக்கும் மேலே இதே ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தம் எடுத்து இருக்கிறார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி ஒரு தொழில் நடத்திவரும் நிலையில், வருமானவரி சோதனையை அவருடன் சம்பந்தப்படுத்தி, அவரையும் விசாரணை செய்வதற்காக வருமானவரித் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர் என்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வந்தது என்பது கண்டிக்கத்தக்க விஷயம்.

இதற்கு அதிமுக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி, வீட்டில்தான் இருக்கிறார். வருமானவரி சோதனைக்கும் அவருக்கும் எந்த தொடர்பு இல்லை.” என்று விளக்கமளித்துள்ளார்.