பிரதமர் பதவி விலக வேண்டும் - திருமாவளவன்

மோசடி கடனாளிகள் மீது நடவடிக்காத பிரதமர் பதவி விலக வேண்டும்

Sep 12, 2018, 11:45 AM IST

மோசடி கடனாளிகள் பட்டியல் மீது நடவடிக்கை எடுக்க தவறிய பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Thirumavalavan

இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், " ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் மோசடி கடனாளிகளின் பட்டியலை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கச் சொல்லியும் நடவடிக்கை எடுக்காமல் அவர்களை நாட்டைவிட்டு தப்பிக்க அனுமதித்த பிரதமர் மோடி அவர்கள் இதற்குப் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

திரு.முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாராளுமன்ற மதிப்பீடுக் குழு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வாராக் கடன்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சமர்பித்துள்ளார். அதில் வாராகடன்கள் உருவாவதற்கான காரணங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். மோசடியாக உள்நோக்கத்துடன் கடன் பெறுவது முக்கியமான காரணமாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘மோசடி கடனாளிகளின் பட்டியலைப் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி ஒன்றிரண்டு பேர் மீதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் போது வலியுறுத்தினேன். அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரியவில்லை. இது அவசரமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு பிரச்சனையாகும்’ என்று அவர் கூறியுள்ளார்.

Raghuram Rajan

ரகுராம் ராஜன் அளித்த பட்டியலில் நிரவ் மோடி, முகுல் சோக்சி ஆகியோரின் பெயர் உள்ளதாகவும் அவர்களை நாட்டைவிட்டு தப்பிச் செல்ல அனுமதித்தது எப்படி என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

விவசாயிகளும், மாணவர்களும் வாங்குகிற சில ஆயிரம் ரூபாய் கடன்களுக்காக அவர்களை அவமானப்படுத்தி அடியாட்களை வைத்து மிரட்டி வங்கிகள் தரும் நெருக்கடியால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை மோசடி செய்யும் கார்ப்ரேட்டுகளுக்கு பாதுகாப்பளித்து அவர்களை வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல மோடி அரசு உதவுகிறது.

ரகுராம் ராஜன் பிரதமர் அலுவலகத்துக்கு அளித்த மோசடி கடனாளிகளின் பட்டியலை உடனே பகிரங்கமாக வெளியிட வேண்டும். இத்தனை காலமாக அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் மோசடி பேர்வழிகள் தப்பிச் செல்ல உதவியாக இருந்ததற்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

You'r reading பிரதமர் பதவி விலக வேண்டும் - திருமாவளவன் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை