மாநில அரசை இயக்குவது ஒரு கைதியா?! சஞ்சய் தத் விடுதலையில் பேரறிவாளன் கொதிப்பு

Perarivalan Questions Sanjya Dutt early release

by Mathivanan, Dec 6, 2018, 11:09 AM IST

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார் பேரறிவாளன். மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ விசாரித்த வழக்கு எனக் கூறி, விடுதலையை தாமதப்படுத்தி வருகிறது மத்திய அரசு. அப்படியானால் சஞ்சய் தத்தை மட்டும் எப்படி விடுதலை செய்தீர்கள் என புனேவில் உள்ள எரவாடா சிறைக்குத் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் மனு அனுப்பினார் பேரறிவாளன்.

இதற்கு உரிய பதில் கிடைக்காததால் மாநில தகவல் ஆணையத்தில் முறையீடு செய்தார்.
இதுகுறித்து செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளனர் பேரறிவாளன் வழக்கறிஞர்கள். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக தகவல் கோரி மகாராஷ்டிரா மாநில தகவல் ஆணையம் முன்பு கடந்த 19.10.2016 அன்று பேரறிவாளன் தாக்கல் செய்த இரண்டாவது மேல்முறையீடு மற்றும் தகவல் தர மறுத்த அலுவலர்கள் மீது அபராதம் விதிக்க கோரிக்கை ஆகியன புனே தகவல் ஆணையம் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது. சுமார் 40 நிமிடங்கள் நடந்த விசாரணையில் பேரறிவாளன் சார்பில் மராட்டிய மாநில தலித் செயற்பாட்டாளரும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலருமான பாஸ்கர் கர்பாரி கெய்க்வாட், வழக்குறைஞர் நிலேஷ் உகே மற்றும் உச்ச நீதிமன்ற வழக்குறைஞர் பாரி வேந்தன் ஆகியோர் ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி கருத்துக்களை எடுத்து வைத்தனர்.

விசாரணையின்போது சஞ்சய் தத் தந்த கடிதம் ஒன்றினை எரவாடா சிறை அதிகாரி சமர்ப்பித்தார். அந்த கடிதத்தில் தனது தகவல்களை வழங்க கூடாது என சஞ்சய் தத் குறிப்பிட்டிருந்ததை அந்த அதிகாரி சுட்டிக்காட்டி வாதிட்டார்.

அப்போது பேரறிவாளன் தரப்பு வழக்குறைஞர் நிலேஷ் உகே, "அப்படி எனில் மாநில அரசை ஒரு கைதி தான் வழிநடத்துகிறாரா?" என கேள்வி எழுப்பினார். மேலும் உச்ச நீதிமன்ற வழக்குறைஞர் பாரி வேந்தன் ஆவணங்களை வழங்க வேண்டியது சட்ட கடமை என்பதற்கு ஆதரவாக 14.08.2018 அன்று மத்திய தகவல் ஆணையம் வழங்கிய உத்தரவு உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை சுட்டிக்காட்டி வாதிட்டார்.

அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்ட மாநில தகவல் ஆணையர் உத்தரவு பின்னர் தரப்படும் என ஒத்திவைத்தார். பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பில் அரசியல் சாசனம் உறுப்பு 161ன்படி தமிழக அரசு அமைச்சரவை தீர்மானத்தின்மீது முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது பெரும் சர்ச்சையை எதிர்ப்பை உண்டாக்கி வருகிறது.

இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத் முன்விடுதலை குறித்த ஆவணங்கள் வெளியாவது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சஞ்சய் தத் குறித்த ஆவணங்கள் வெளியாகும்பட்சத்தில் தீவிரவாதம் குறித்த பிஜேபி மத்திய அரசின் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகிவிடும் என்ற காரணத்தினால் தொடர்ந்தும் இதுகுறித்த தகவல் மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

257 நபர்கள் மரணம் 2000த்துக்கு மேற்பட்டோர் படுகாயமடையவும் காரணமான உலகையே உலுக்கிய 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டு "தடா" சிறப்பு நீதிமன்றத்தில் ஆயுதச்சட்டத்தின்படி 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் கருணை அடிப்படையில் குறைந்தபட்ச தண்டனையான 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

"தடா" சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்ட மத்திய புலனாய்வு துறையான சிபிஐயினரால் விசாரிக்கப்பட்ட அவ்வழக்கில் நீதிமன்றத்தால் 5 ஆண்டுகளாக குறைப்பு பெற்ற சஞ்சய் தத் பின்னர் மேலும் தண்டனை கழிவு வழங்கப்பட்டு கடந்த 25.02.2016 அன்று மகாராஷ்ட்ர மாநில எரவாடா சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்.
"தடா", ஆயுதச்சட்டம் போன்ற மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட சட்டங்களின் கீழ் தண்டனை பெற்ற கைதிகளுக்கு மத்திய அரசு மட்டுமே தண்டனை கழிவு வழங்க முடியும் என 02.12.2015 அன்று உச்ச நீதிமன்ற ஐவர் அரசியல் அமர்வு தீர்ப்பு வழங்கிய நிலையில் சஞ்சய் தத் மாநில அரசால் முன்விடுதலை செய்யப்பட்டது பெரும் விவாவதங்களை எழுப்பியது.

மேலும் "தடா" சட்டப்படி ராஜீவ் கொலை வழக்கு குற்றமாகாது என உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில் சிபிஐயினரால் விசாரணை செய்யப்பட்டது என்ற காரணத்தை வைத்து தனக்கு தான் அதிகாரம் உண்டு என வாதிட்ட மத்திய அரசு நடிகர் சஞ்சய் தத் முன்விடுதலையை கேள்வி எழுப்பாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதுகுறித்து பேரறிவாளன் கடந்த 24.03.2016 அன்று 5 கேள்விகளை உள்ளடக்கி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எரவாடா சிறைக்கு விண்ணப்பம் அனுப்பினார்.

தகவல் அலுவலர் தகவல் தர மறுத்த நிலையில் 04.05.2016 அன்று பேரறிவாளன் துறை ரீதியான முதல் மேல் முறையீடு செய்தார். இதனிடையே தகவல் அலுவலர் 17.05.2016 தேதியிட்டு பேரறிவாளனுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் பேரறிவாளன் கேட்ட கேள்விகள் மூன்றாம் நபர் தொடர்பானது என்பதால் தரமுடியாது என மறுத்திருந்தார். மீண்டும் இது குறித்து முதல் மேல்முறையீட்டு அலுவலரிடம் 02.06.2016 அன்று பேரறிவாளன் தனது நியாயங்களை எடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து பேரறிவாளன் சார்பில் வழக்குறைஞர் நிலேஷ் உகே மேல் முறையீட்டு அலுவலர் முன்பு 17.05.2016 அன்று நேரில் ஆஜராகி கருத்துக்களை எடுத்து வைத்தார். இருப்பினும் தகவல்களை தர மறுத்து 19.06.2016 அன்று மேல் முறையீட்டு அலுவலர் கடிதம் எழுதினார். இந்தநிலையில் தான் பேரறிவாளன் மகாராஷ்டிரா மாநில தகவல் ஆணையத்தின் புனே தகவல் ஆணையம் முன்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மீது விசாரணை செய்யப்பட்டது.

You'r reading மாநில அரசை இயக்குவது ஒரு கைதியா?! சஞ்சய் தத் விடுதலையில் பேரறிவாளன் கொதிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை