ட்ரம்ப் செய்வது சரியில்லை...- சீறும் அமெரிக்கவாழ் இந்தியத் தலைவர்கள்
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கான விசா இனி வரும் காலங்களில் வழங்கப்படாது என ட்ரம்ப் கொண்டுவரவுள்ள சட்டத்துக்கு அமெரிக்கவாழ் இந்திய செனெட் உறுப்பினர்களும் முக்கிய அமெரிக்க அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஹெச்1பி விசா மூலம் ஐடி ஊழியர்களே அதிகளவில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றப் பின்னர் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான சூழல் இறுக்கமாகியுள்ளது.
அதாவது அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கான ஹெச்4 விசா நடைமுறைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அமெரிக்காவில் பணியாற்றுவோரின் துணைகளுக்கு வழங்கப்படும் விசா தரப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒபாமா அதிபராக இருந்தபோது ஹெச்1பி விசா நடைமுறைகளுக்காக கொண்டுவரப்பட்ட அனைத்து நடைமுறைகளும் தற்போது மறுபரிசீலனை செய்யப்படவுள்ளது. இதனால் ஹெச்1பி விசா மூலம் அதிகம் பயனடையும் இந்தியர்களுக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்க காங்கிரஸ் தலைவரும் முதல் அமெரிக்கவாழ் இந்தியப் பெண் உறுப்பினருமான ப்ரமிளா ஜெயபால் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். சபையில் அவர் கூறுகையில், "ஹெச்4 விசா முறையை முற்றிலும் தடை செய்வதை நான் எதிர்க்கிறேன். இது அரசியல் பிரச்னை என்பதையும் தாண்டி பாலியில் பாகுபாடாகும். ஹெச்4 விசா பயனாளர்களில் பெரும்பான்மையோர் பெண்கள். இந்தியாவிலிருந்து ஹெச்4 விசா மூலம் அமெரிக்காவில் வாழும் பெண்கள் அவரவர் கணவர்களைவிட படிப்பிலும் பதவிகளிலிம் உயர் இடத்தில் உள்ளனர்.
கடந்த ஆட்சியில் முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டுவந்த திட்டத்தால் பயனடைந்த சுமார் ஒரு லட்சம் இந்தியர்கள் ட்ரம்ப் உத்தரவால் பெரிதும் பாதிக்கப்படுவர். இது அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகப்பெரும் சரிவைத் தரும்" என தனது எதிர்ப்பை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
மேலும் அமெரிக்க செனெட் சபையில் உறுப்பினர்களாக உள்ள அமெரிக்கவாழ் இந்தியர்களும் அவரவர் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
You'r reading ட்ரம்ப் செய்வது சரியில்லை...- சீறும் அமெரிக்கவாழ் இந்தியத் தலைவர்கள் Originally posted on The Subeditor Tamil
More Velinaduval inthiyargal News