உலகை அச்சுறுத்தும் சீன வைரஸ் நோய்.. 41 பேர் சாவு, 1300 பாதிப்பு..
உலகை அச்சுறுத்தும் புதிய நோயாக கொரோனா வைரஸ் நோய் உருவெடுத்துள்ளது. சீனாவில் தோன்றிய இந்நோயால் இது வரை 41 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் ஹுபை மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால், அந்த நகரில் வேகமாக பரவியது. இதையடுத்து, அந்த நகருக்கு சீல் வைக்கப்பட்டு, விமானநிலையம், பேருந்து நிலையம் என்று அனைத்து இடங்களிலும் மக்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
ஆனாலும் இந்த வைரஸ் வேகமாக பரவி, சீனாவிலேயே பல மாகாணங்களுக்கு பரவியது. மேலும், சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலமாக மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. தற்போது, இந்த வைரஸ் தாக்குதல் தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், தென்கொரியா, தைவான், நேபாளம், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே 7 சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த விமான நிலையங்களுக்கு வந்துசேரும் அனைத்து பயணிகளும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். நேற்று(ஜன.24) மேலும் 12 சர்வதேச விமான நிலையங்களில் இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டிருக்கிறது. சீனாவில் இருந்து மும்பைக்கு வந்த பயணிகளில் 2 பேருக்கு காய்ச்சல் இருந்ததால் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். எனினும், அவர்களுக்கு அந்த கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதாக கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் சீனாவின் தேசிய சுகாதார நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இது வரை 41 பேர் பலியாகியுள்ளதாகவும், 1287 பேர் நோய் பாதித்து சிகிச்சையில் உள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்டிருந்தால் காய்ச்சல், இருமல், மூச்சுதிணறல் ஏற்படும். நோய் கடுமையானால் உயிரிழப்பு ஏற்படலாம். உலகை அச்சுறுத்தும் இந்த நோய் பரவுவதை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
You'r reading உலகை அச்சுறுத்தும் சீன வைரஸ் நோய்.. 41 பேர் சாவு, 1300 பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil
More World News