பதற்றமானவர் ராகுல்காந்தி.. ஒபாமா புத்தகத்தில் கருத்து..

by எஸ். எம். கணபதி, Nov 13, 2020, 12:17 PM IST

ஆசிரியரை கவரும் ஆசை கொண்ட மாணவராக இருந்தாலும், ஆழமாக கற்க விரும்பாதவராக ராகுல்காந்தி உள்ளார் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார். அமெரிக்காவில் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. பிரதமர் மன்மோகன்சிங் காலத்திலும், பிரதமர் நரேந்திர மோடி காலத்திலும் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். இருவருடனும் நன்கு பழகியிருக்கிறார். ஒபாமா தனது 8 ஆண்டு பதவிக் காலத்தில் பெற்ற அரசியல் அனுபவங்கள் மற்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து, ஏ ப்ராமிஸ்டு லேண்ட்(A promissed land) என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம் இன்னும் வெளிவரவில்லை. எனினும், இந்த புத்தகம் குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் மதிப்புரை வெளிவந்துள்ளது. பராக் ஒபாமா எழுதியுள்ள அந்த புத்தகத்தில், ராகுல்காந்தி எப்போதும் பதற்றமானவராகவும், கணிக்க முடியாதவராகவும் இருக்கிறார்.

ஆசிரியரை கவர வேண்டுமென்ற ஆர்வமுடைய மாணவராக அவர் இருந்தாலும், திறமை இருந்தாலும் எந்த ஒரு விஷயத்திலும் ஆழமாக கற்று கொள்ளக்கூடிய பக்குவம் இல்லாதவராக உள்ளார் என்று குறிப்பிட்டிருப்பதாக மதிப்புரையில் கூறப்பட்டுள்ளது. அதே போல், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறித்தும் ஒபாமா எழுதியிருக்கிறார். மன்மோகன்சிங்கும், அப்போதைய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பாப் கேட்ஸ்சும், எவ்வித பதற்றமும் இல்லாத நேர்மை உடையவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்தது தொடர்பாகவும் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அதே சமயம், இப்போதைய நமது பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி ஒபாமா எழுதியிருக்கிறாரா, இல்லையா என்பது குறித்து நியூயார்க் டைம்ஸ் மதிப்புரையில் எதுவும் கூறப்படவில்லை. ரஷ்ய அதிபர் புடின் உள்பட பல தலைவர்கள் பற்றியும் ஒபாமா எழுதியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

You'r reading பதற்றமானவர் ராகுல்காந்தி.. ஒபாமா புத்தகத்தில் கருத்து.. Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை