இஸ்ரேலில் ஆட்சி கவிழ்ப்பு.. 2 ஆண்டுகளில் நான்காவது தேர்தல்..

by எஸ். எம். கணபதி, Dec 23, 2020, 09:18 AM IST

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் தலைமையிலான அரசு கவிழ்கிறது. இரண்டு ஆண்டுகளில் அந்நாடு நான்காவது தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது.இஸ்ரேலில் லிகுட் தேசிய விடுதலை முன்னணி கட்சியின் தலைவரான பெஞ்சமின் நேதன்யாகு தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. பிரதமராக நேதன்யாகு இருந்து வந்தார். அந்நாட்டில் கடைசியாக நடைபெற்ற 3 தேர்தல்களிலும் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் குழப்ப நிலை ஏற்பட்டது. அதனால், கடந்த மே மாதம் நேதன்யாகு, புளு அன்ட் ஒயிட் கட்சியுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தார். அப்போது நேதன்யாகு 18 மாதங்களும், அதன்பிறகு புளு அன்ட் ஒயிட் கட்சித் தலைவர் பென்னி கன்ட்ஷ் 18 மாதங்களும் பிரதமர் பதவியில் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு நேற்று(டிச.22)தான் கடைசி நாள். ஆனால், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டதால் உரியக் காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து நேதன்யாகு ஆட்சி கவிழ்ந்தது. நேதன்யாகு தன் மீதான ஊழல் வழக்குகளை முடிப்பதிலேயே குறியாக இருக்கிறார். நாட்டின் பொருளாதார சூழல் குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை என்று பென்னி கன்ட்ஷ் குற்றம்சாட்டியிருக்கிறார்.

நேதன்யாகு இதற்குப் பதிலளிக்கையில், கொரோனா போன்ற பேரிடரையும், பொருளாதார சிக்கலையும் நாடு சந்தித்து வரும் நிலையில் இன்னொரு தேர்தலை கன்ட்ஷ் வரவைத்துள்ளார். இதன்மூலம், நாட்டிற்கு இழப்பை ஈடுபடுத்தியுள்ளார் என்று கூறியிருக்கிறார். இப்படியாக மாறி, மாறி வசை பாடத் தொடங்கியுள்ளனர். தற்போது இந்நாடு 2 ஆண்டுகளுக்குள் 4வது தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. மார்ச் 23ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading இஸ்ரேலில் ஆட்சி கவிழ்ப்பு.. 2 ஆண்டுகளில் நான்காவது தேர்தல்.. Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை