சென்னை, கோவையில் கொரோனா பரவல் நீடிப்பு..

by எஸ். எம். கணபதி, Dec 23, 2020, 09:15 AM IST

தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு நேற்று(டிச.22) கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. தமிழக அரசு நேற்று(டிச.22) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 1052 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இதையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 9014 ஆக உயர்ந்தது.

மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1139 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 87,611 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 17 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,012 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 9391 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 311 பேருக்கும், கோவையில் 114 பேருக்கும், செங்கல்பட்டில் 63 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 67 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.சென்னையில் இது வரை 2 லட்சத்து 22,888 பேருக்கும், கோவையில் 51,483 பேருக்கும், செங்கல்பட்டில் 49,408 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 42,256 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.தமிழகம் முழுவதும் நேற்று 65 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டதில் ஆயிரம் பேருக்குத்தான் தொற்று பாதிப்பு உறுதியானது. அதனால் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது.

You'r reading சென்னை, கோவையில் கொரோனா பரவல் நீடிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை