நான் பல தவறுகளை செய்யப் போகிறேன்.. புதிய அதிபர் ஜோ பிடன் பேச்சு..
நான் பல தவறுகளை செய்யப் போகிறேன் என்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன் தொடக்க உரையிலேயே அதிரடியாகக் குறிப்பிட்டார்.அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட அதிபர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். கடந்த ஜன.6ம் தேதி, நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, ஜன.20ம் தேதி அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசும் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஜோ பிடன் தனது தொடக்க உரையில் கூறியதாவது:அமெரிக்காவில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது. எனது ஆட்சியில் நான் பல தவறுகளைச் செய்யப் போகிறேன். அதை எல்லாம் உங்களிடம் சொல்லி உண்மையை ஒப்புக் கொள்வேன். எனது அந்த தவறுகளை எல்லாம் திருத்துவதற்கு உங்களின் உதவிகளை நாடுவேன். எந்த தவறு செய்தாலும் அதற்குப் பொறுப்பேற்காமல் ஓடி விட மாட்டேன். நிச்சயமாக, அவற்றுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வேன். இவ்வாறு ஜோ பிடன் குறிப்பிட்டார்.
ஜோ பிடன் பதவியேற்றதும் கோவிட்19 நோய் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள், தடுப்பூசி நடவடிக்கைகள் தொடர்பாகப் பல நிர்வாக உத்தரவுகளை அடுத்தடுத்து பிறப்பித்தார். இது வரை நடந்தது போல் பாகுபாடுகள் காட்டாமல், கடைசியாக நாம் ஒரே தேசமாக இந்த கொரோனா தொற்று நோயை எதிர்கொண்டு முறியடிப்போம் என்றும் ஜோ பிடன் மறைமுகமாக டிரம்ப்பைத் தாக்கியிருக்கிறார். அமெரிக்காவில் கொரோனாவுக்கு இது வரை 3 லட்சம் பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
You'r reading நான் பல தவறுகளை செய்யப் போகிறேன்.. புதிய அதிபர் ஜோ பிடன் பேச்சு.. Originally posted on The Subeditor Tamil
More World News