ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட 143 செயற்கைக் கோள்கள் ஸ்பேஸ் எக்ஸ் புதிய உலக சாதனை

by Nishanth, Jan 25, 2021, 11:57 AM IST

ஒரே நேரத்தில் 143 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 104 செயற்கைக் கோள்கள் என்ற முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் எலான் மஸ்க்கைத் தலைவராகக் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம், விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தயாரித்த பால்கன்-9 ராக்கெட், புளோரிடா மாகாணம் கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் புறப்பட்ட 9வது நிமிடத்தில் செயற்கைக் கோள்களைத் தாங்கிய இரண்டாம் கட்டம் புவி வட்டப் பாதையை நோக்கிச் செல்ல, முதல்கட்டத்தில் இருந்த பூஸ்டர் பூமிக்குத் திரும்பி அட்லாண்டிக் கடலில் தயாராக நிறுத்தப்பட்டிருந்த மிதவையில் தரையிறங்கியது. இந்த ராக்கெட்டில் செலுத்தப்பட்ட 143 சிறிய ரக செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இதில் அரசு தொடர்பான மற்றும் வணிகரீதியானவை என 133 செயற்கைக்கோள்களும், 10 ஸ்டார்லிங்க் சாட்டிலைட்களும் அடங்கும்.

12 ஆயிரம் செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி சாட்டிலைட் இணைய சேவையை வழங்கும் ஸ்டார்லிங்க் திட்டத்தில், ஏற்கனவே 1015 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று மேலும் 10 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. நம் நாட்டின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த 2017ம் ஆண்டு 104 செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியது. இது தான் நேற்று வரை உலக சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது 143 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புதிய உலக சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட 143 செயற்கைக் கோள்கள் ஸ்பேஸ் எக்ஸ் புதிய உலக சாதனை Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை