அமெரிக்க பெண்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும் ஊபர் பயணம்!

பெண்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும் ஊபர் பயணம்!

by Suresh, May 2, 2018, 10:10 AM IST

சிஎன்என் செய்தி நிறுவனம், காவல்துறையின் பதிவேடுகள், நீதிமன்றங்களின் தீர்ப்புகள் போன்ற பல தரவுகளின் அடிப்படையில் திரட்டிய தகவலின்படி, அமெரிக்காவில் 103 ஊபர் ஓட்டுநர்கள் மீது வன்கொடுமை குற்றச்சாட்டுக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

சான்டியாகோவில் ஒரு பெண், பார்ட்டி ஒன்றிலிருந்து ஊபர் வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். வழியில் வாந்தி வந்ததால், வாகனத்தை நிறுத்தும்படி கேட்டுள்ளார். அதன்பின்னர், வாகனத்தில் ஏறியவர் மயக்கமாகி விட்டார். அவருக்கு நினைவு வந்தபோது, ஊபர் ஓட்டுநர் தன்னை வன்கொடுமை செய்ய முயற்சித்துக் கொண்டிருப்பதை கண்டு, எப்படியோ தப்பித்து காவல்துறையின் அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.

மியாமியில் பெண்ணொருவர், குழந்தைகளை அவர்களை பாட்டியிடம் விட்டு விட்டு தோழியுடன் பாருக்குச் சென்றுள்ளார். ஊபரில் வீடு திரும்பிய அவர், வழியில் மயக்கமாகியுள்ளார். காலையில் கண்விழித்தபோது, ஆடையில்லாமல் இருப்பதை அறிந்துள்ளார். இரவில் தான் வந்த ஊபரின் ஓட்டுநர் தன்னை வன்கொடுமை செய்துள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

2016-ம் ஆண்டு கலிபோர்னியாவில் பெண்ணொருவர் ஊபரில் பயணித்தபோது, மதுவின் போதையில் மயங்கியுள்ளார். விழித்தபோது, ஊபர் ஓட்டுநர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டிருந்ததை அறிந்துள்ளார்.

முதல் குற்றச்சம்பவத்தில் ஜாண் டேவிட் ஸான்செஸ் என்ற 57 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவரது கம்ப்யூட்டரை போலீஸார் ஆய்வு செய்தபோது, அவர் பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட, வன்கொடுமை செய்த படங்கள் கிடைத்துள்ளன. அவர்மேல் 33 வெவ்வேறு வழக்குகள் உள்ளன. அவற்றில் பெண்கள், குழந்தைகளை வன்கொடுமை செய்து துன்புறுத்திய வழக்குகளின் எண்ணிக்கை ஒன்பது. கடந்த நவம்பர் மாதம், ஜாண் டேவிட் ஸான்செஸூக்கு 80 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இரண்டாவது சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர், வழக்கு முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கிறார். மூன்றாவது சம்பவத்தில் 47 வயதான ஓட்டுநர், சம்பவம் நடந்த மறுநாள், பாதிக்கப்பட்ட பெண்ணின் மொபைல் ஃபோனோடு கைது செய்யப்பட்டுள்ளார். அவர், இருவரின் சம்மதத்தின்பேரிலேயே இந்த சம்பவம் நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஊபர் நிறுவனத்தின் மேல் அப்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஊபர் ஓட்டுநர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், அவர்கள் கைது விவகாரம் குறித்து செய்தி நிறுவனம், ஊபர் நிறுவனத்திடம் விசாரித்த பின்னர், கடந்த வாரம், ‘பாதுகாப்பான சமுதாயம் அமைப்பது எப்படி?' என்ற ஒரு ஒளிப்பதிவை, ஊபர் தனது இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது.

உலகமெங்கும் 630 நகரங்களில் தினமும் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து வரும் 70 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஊபர் நிறுவனத்தின் ஓட்டுநர்கள் மேல் வந்துள்ள இக்குற்றச்சாட்டுக்கள், அவற்றை பற்றிய தரவுகள் புறக்கணிக்கப்படத்தக்கவை அல்ல.

“வன்கொடுமை என்பது பெருங்குற்றம். ஊபர் இக்குற்றங்களை ஆதரிப்பதில்லை. இது குறித்து தீர்வுகாண ஊபர் எல்லா வகையிலும் ஒத்துழைக்கும்," என்று ஊபர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அமெரிக்க பெண்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும் ஊபர் பயணம்! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை