ஜெயலலிதா நினைவிடம்... மத்திய அரசு அனுமதி தேவையில்லை...

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க, மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்தது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் கட்டுவதற்கு தமிழ்நாடு மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையம் வழங்கிய அனுமதியை எதிர்த்து வழக்கறிஞர் எஸ்.துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோவன், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறும் வகையில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். கடந்த மார்ச் 14ஆம் தேதி தமிழக பொதுப்பணித்துறை சார்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை ஒரே நாளில் பரிசீலித்து மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், "20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது மட்டும்தான் மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்,. அனைத்து துறைகளிடம் அனுமதி பெற்ற பிறகே அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது" என விளக்கம் அளித்தார்.

அரசு தரப்பு விளக்கத்தை விரிவான பதில் மனுவாக தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு குறித்து மத்திய - மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

You'r reading ஜெயலலிதா நினைவிடம்... மத்திய அரசு அனுமதி தேவையில்லை... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குஷ்புவுடன் எந்த பிரச்சினையும் இல்லை- திருநாவுக்கரசர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்