சினிமா இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம் கோவை மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

பிரபல மலையாள சினிமா இயக்குனர் ஷாநவாஸ் (37) மாரடைப்பால் மரணம் அடைந்தார். இன்று காலை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைத்து அவரது உயிர் பிரிந்தது.மலையாள சினிமாவில் எடிட்டராக கால் பதித்தவர் ஷாநவாஸ். ஏராளமான மலையாள சினிமாவில் எடிட்டராக பணிபுரிந்த இவர், கடந்த சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக கரி என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டாக ஓடாவிட்டாலும் சினிமா விமர்சகர்களின் ஆதரவு கிடைத்தது.

இந்நிலையில் பிரபல நடிகர் ஜெயசூர்யாவை நாயகனாக வைத்து சூபியும் சுஜாதயும் என்ற பெயரில் ஒரு படத்தை இவர் இயக்கினார். இந்த சமயத்தில் தான் கொரோனா பரவல் காரணமாக லாக் டவுன் அமலுக்கு வந்தது. இதையடுத்து இந்த படத்தை ஓடிடியில் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு மலையாள சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த எதிர்ப்பையும் மீறி இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குனர் ஷாநவாஸ் தனது அடுத்த படத்திற்காகக் கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இதற்காக பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி என்ற இடத்தில் இவர் தங்கியிருந்தார். நேற்று அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை இயக்குனர் ஷாநவாஸ் பரிதாபமாக இறந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You'r reading சினிமா இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம் கோவை மருத்துவமனையில் உயிர் பிரிந்தது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சட்டசபையை கூட்ட அனுமதி மறுப்பு... கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள முதல்வர் கடிதம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்