உயிருக்கு ஆபத்து நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவர் ஆனவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு

உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவரான விபின் லால் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எர்ணாகுளத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட நடிகையும், அரசுத் தரப்பு சார்பிலும் குற்றம் சாட்டப்பட்டது. எனவே இந்த விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் என்று இந்த இரு தரப்பு சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க கேரள உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் மறுத்து விட்டது. மேலும் விசாரணையை தொடர்ந்து நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே அரசுத் தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து வழக்கு விசாரணை தடைபட்டது. சில வாரங்களுக்கு பின்னர் புதிய ஒரு அரசு வக்கீல் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த 21ம் தேதி முதல் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விபின் லால் என்பவர் அப்ரூவராக மாறினார். இதையடுத்து அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதை எதிர்த்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் சார்பில் விசாரணை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணை முடிவதற்குள் அப்ரூவர் விபின் லாலை விடுவித்தது சட்டப்படி செல்லாது என்றும், எனவே அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட விசாரணை நீதிமன்றம், விபின் லாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து விபின் லாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர். ஆனால் கடந்த இரு தினங்களாக போலீசாரால் விபின் லாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை. இந்நிலையில் விபின் லால் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது: நான் இந்த வழக்கில் அப்ரூவரான பிறகு எனக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்தன. நடிகர் திலீப்புக்கும் ஆதரவாக சாட்சியம் அளிக்க வேண்டும் என்றும் மீறினால் உயிருடன் இருக்க முடியாது என்றும் எனக்கு மிரட்டல்கள் வந்தன. இது குறித்து போலீசில் புகார் செய்தேன். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் எனக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக நடிகரும், எம்எல்ஏவுமான கணேஷ்குமாரின் உதவியாளர் பிரதீப் குமாரை கைது செய்தனர். இந்நிலையில் எதிர் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று என்னை கைது செய்ய விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சட்டப்படி செல்லாது. ஏற்கனவே என்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே நீதிமன்றத்தில் ஆஜரானால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என நான் அஞ்சுகிறேன். நீதிமன்றத்தில் 21ம் தேதி ஆஜராக வேண்டும் என்று எனக்கு போன் மூலம் தகவல் வந்தது. நானும் ஆஜராவதற்கு தயாராக இருந்தேன். ஆனால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கும் திட்டம் இருந்ததால் தான் நான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே விசாரணை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு விபின் லால் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading உயிருக்கு ஆபத்து நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவர் ஆனவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிறுத்தையைக் கூட விட்டுவைக்காத கும்பல் பொறி வைத்து பிடித்து கொன்று சாப்பிட்ட 5 பேர் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்