திருச்சி லலிதா ஜுவல்லரியில் 100 கிலோ நகைகள் கொள்ளை.. முகமூடி கொள்ளையர் அட்டகாசம்..

Big robbery in trichi Lalitha jewellary

திருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி ரூபாய் மதிப்புடைய தங்க, வைர நகைகள் கொள்ளை போயிருக்கிறது. கொள்ளையர்கள் சிறுவர்கள் அணியும் முகமூடிகளை அணிந்து கொண்டு வந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி அமைந்துள்ள கட்டடத்தின் பின்புறச் சுவரில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், லலிதா ஜூவல்லர்ஸ் நகைக் கடையின் கீழ் தளத்துக்கு வந்து, அங்கே இருந்த அனைத்து தங்க மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இன்று காலை வழக்கம் போல கடையைத் திறந்த ஊழியர்கள், நகைகள் கொள்ளை போனதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி உடனடியாக காவல் துறைக்கு தகவல் தரப்பட்டது. அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள், கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர்.

பின்னர், கைரேகை நிபுணர்கள் வந்து எங்காவது ரேகை பதிவாகியிருக்கிறதா என்று சோதித்தனர். கடையில் பல தடயங்களை சேகரித்து சென்ற போலீசார் இது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜுவல்லரி உரிமையாளர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுமார் 100 கிலோ எடையுள்ள நகைகள், சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனதாக தெரியவந்துள்ளது.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், கொள்ளையர்கள் 2 பேர் சிறுவர்கள் அணியும் விலங்கு பொம்மைகள் போன்ற முகமூடிகளை அணிந்து கொண்டு வந்துள்ளதும், ரேகை பதிவாகாமல் இருக்க கையுறைகளை அணிந்து கொண்டிருப்பதும் தெரிந்தன.

அந்த கடைக்கு இரவு முழுக்க தனியார் காவலர்கள் இருந்தம் இந்த துணிகர கொள்ளை நடந்திருக்கிறது. அதனால், கொள்ளையர்கள் பல நாட்களாக நோட்டமிட்டு இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரிகிறது. இதையடுத்து, சிசிடிவி கேமராவில் கடந்்த ஒரு மாதத்தில் பதிவான காட்சிகளை போலீசார் பார்த்து அடிக்கடி வந்தவர்கள் யார் என்று ஆய்வு செய்து வருகி்னறனர்.

You'r reading திருச்சி லலிதா ஜுவல்லரியில் 100 கிலோ நகைகள் கொள்ளை.. முகமூடி கொள்ளையர் அட்டகாசம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காந்தி, சாஸ்திரி நினைவிடங்களில் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்