ஆற்றில் பிள்ளைகளை எறிந்த குடிகார தந்தை - ஆந்திராவில் பரிதாபம்

ஆற்றில் பிள்ளைகளை எறிந்த குடிகார தந்தை

மனைவியுடனான சண்டையில் மூன்று மகன்களை ஆற்றில் வீசி கொன்றுள்ளார் ஒருவர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஞாயிறன்று இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சித்தூரை சேர்ந்தவர் வெங்கடேஷ். முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லாததினால் அமராவதி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு புனீத் (வயது 6), சஞ்சய் (வயது 3), ராகுல் (3 மாதம்) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

வெங்கடேஷூக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் கணவருடனான சண்டையில், அமராவதி மூன்று மகன்களையும் அழைத்துக்கொண்டு தன் பெற்றோரிடம் சென்று விட்டார். மனைவியையும் மகன்களையும் அழைத்து வரச் சென்றுள்ளார் வெங்கடேஷ். வரும் வழியில் மீண்டும் கணவனுக்கு மனைவிக்குமிடையே சண்டை வந்துள்ளது. சண்டையின்போது, வெங்கடேஷ் மூன்று மகன்களையும் தூக்கிக் கொண்டு சென்றுள்ளார்.

அப்பகுதியில் ஓடும் ஆறு ஒன்றில் குழந்தைகளின் சடலங்கள் மிதப்பதை பார்த்து அதிர்ந்த உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தங்களுக்குள் நடந்த சண்டையை குறிப்பிட்ட அமராவதி, “பெற்ற பிள்ளைகளை ஆற்றில் தூக்கி எறிந்து விடுவார் என்று நான் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை” என்று காவல்துறையினரிடம் கண்ணீருடன் கூறியுள்ளார்.

மது குடும்பத்தையே அழித்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

You'r reading ஆற்றில் பிள்ளைகளை எறிந்த குடிகார தந்தை - ஆந்திராவில் பரிதாபம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழக மக்கள் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவ வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்