புற்றுநோய் மரண சாசனம் அல்ல

Consultancy Corner: Cancer curable if detected with early symptoms

ஒரு காலத்தில் புற்றுநோய் என்றாலே மரண ஓலை என்ற நிலை இருந்தது. அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ள இக்காலத்தில் புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது ஒன்றுதான். அறிவியல் முன்னேற்றத்தோடு கூட புற்றுநோய் ஒரு சாபமல்ல, அது குணப்படுத்தக்கூடியதே என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.

புற்றுநோயின் அறிகுறிகள்:

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது முக்கியம். ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் மட்டுமே குணப்படுத்துவது சாத்தியம். அறிகுறிகளை பொறுத்து மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

தொடர் இருமல் மற்றும் தொண்டை கட்டுதல்: எப்போதாவது இருமல் வந்தால் பிரச்னை ஏதுமில்லை. மூன்று வாரங்கள் இருமல் தொடர்ந்தால் கண்டிப்பாக சிகிச்சை தேவை. எல்லா வித இருமலும் புற்றுநோயின் அறிகுறி அல்ல. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு இருமல் தொடர்ந்து இருந்து வந்தால் மார்பு எக்ஸ்ரே அல்லது சிடி ஸ்கேன் எடுக்கும்படி மருத்துவர் பரிந்துரைப்பார். நுரையீரல் புற்றுநோய் உள்ளதா என்று உறுதி செய்வதற்காக இப்பரிசோதனை செய்யப்படும்.

மலம் கழிப்பது மற்றும் சிறுநீர் பிரிதல்: வழக்கமாக மலம் கழிப்பது போல் அல்லாமல் மலம் கழிப்பதில் பிரச்னை ஏற்படுவது மற்றும் தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்படுதல் அல்லது மலச்சிக்கல் இருந்தால் குடலில் புற்றுநோய் உள்ளதா என்று மருத்துவர் பரிசோதிப்பார். அதற்கென எண்டோஸ்கோப்பி உள்ளிட்ட சோதனைகள் செய்யப்படும். சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது அடிக்கடி சிறுநீர் பிரிதல், சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுதல் ஆகியவை இருந்தால், அந்த அறிகுறிகள் சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பை அல்லது புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் அல்ல என்பதை உறுதி செய்து கொள்வதற்கு மருத்துவரை சந்திப்பது அவசியம்.

பசியின்மை: வேறு எந்த உடல்நலக் குறைவும் இல்லாதபோது நெடுநாள்களாக பசியில்லாமல் இருந்தால் அது சிறுகுடல் மற்றும் இரைப்பை புற்றுநோய் தாக்கத்தின் அறிகுறியாக இருக்கக்கூடும். ஆகவே, எச்சரிக்கை அவசியம்.
மச்சம் அல்லது மருவில் மாற்றம்: உடலில் இருக்கும் எல்லா மருக்களுமே புற்றுநோய் அல்ல. புதிதாக திடீரென சருமத்தில் ஏதாவது மாற்றம் தென்பட்டால் அல்லது ஏற்கனவே இருந்த மச்சத்தின் அளவு பெரிதானால் தோல் மருத்துவரை ஆலோசிப்பது நலம்.
ஆறாத புண்: புண் அல்லது காயம் ஏற்பட்டு மூன்று வாரங்களுக்கு மேலாகியும் ஆறாமல் இருந்தால் அதன் விவரங்களை மருத்துவரிடம் பகிர்ந்து கொண்டு சந்தேகத்தை நிவிர்த்தி செய்து கொள்ளலாம்.

இரத்தப்போக்கு: வழக்கமான மாதவிடாய் சுழற்சிக்கு அப்பாற்பட்டு பெண்ணுறுப்பில் இரத்தப்போக்கு இருந்தால் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அது கருப்பை அல்லது கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருந்துவிடக்கூடும். இருமும் போது சளியுடன் இரத்தமும் கலந்து வந்தாலும் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்.

எடை குறைதல்: உடல் எடையை குறைக்கவேண்டும் என்று மெனக்கெடுவது இப்போது அதிகரித்துவிட்டது. அந்த அளவுக்கு அனைவருக்குமே அதிக உடல் எடை ஒரு பிரச்னையாக உள்ளது. ஆனால், உடல் எடை குறைவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமலே எடை திடீரென குறைந்தால் அல்லது அதிக அசதியாக உணர்ந்தால் புற்றுநோய்க்கான சோதனையை செய்து கொள்ளவேண்டும்.

திடீர் கட்டி: புதிதாக ஒரு கட்டி தோன்றினாலோ அல்லது ஏற்கனவே இருக்கும் கட்டியின் உருவில் மாற்றம் ஏற்பட்டாலோ மருத்துவரை அணுக வேண்டும். பல நேரங்களில் கட்டிகள் ஆபத்தற்றவையாகவே உள்ளன. ஆனால், பரிசோதித்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு மார்பில் கட்டி இருப்பது தெரிய வந்தால் உடனடியாக சோதித்துக்கொள்வது அவசியம்.

செரிமானம் மற்றும் விழுங்குவதில் பிரச்னை: ஜீரண கோளாறு இருந்தால் அநேகர் சாப்பிடும் உணவுப்பொருள்களை மாற்றிப் பார்ப்பார்கள் அல்லது செரிமானத்திற்கான மருந்துகளை சாப்பிடுவார்கள். சிலருக்கு உணவினை விழுங்கும்போது வலி ஏற்படும். ஆனால் இவை தொண்டை அல்லது உணவு குழல் புற்றுநோயின் அறிகுறிகளாகவும் இருக்கக்கூடும்.

மூச்சிரைத்தல்: முதியோருக்கு மூச்சிரைப்பு இயல்பான ஒன்று. அதில் பயப்பட ஒன்றுமில்லை. மற்றவர்களுக்கு மூச்சிரைப்பு இருந்தால், மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் அல்ல என்பதை உறுதிப்படுத்த சோதனைகள் செய்து கொள்வது நல்லது.

அறிகுறிகளை அலட்சியம் செய்திடாமல் வைத்தியம் செய்தால் புற்றுநோயின் அபாயத்திலிருந்து தப்பிக்க வாய்ப்பு உண்டு.

You'r reading புற்றுநோய் மரண சாசனம் அல்ல Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - செல்லுமிட விவரங்களை அழித்துவிடும் கூகுள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்