சின்மயானந்த் ஓராண்டாக என்னை பலாத்காரம் செய்தார்.. சட்டமாணவி பகீர் குற்றச்சாட்டு

Chinmayanand raped me for a year, I have proof: Student

பாஜக முன்னாள் அமைச்சரான சின்மயானந்த் ஓராண்டு காலம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டிய சட்ட மாணவி தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பேட்டியளித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் சுக்தேவானந்த் சட்டக் கல்லூரி உள்ளது. பாஜக முன்னாள் அமைச்சரான சுவாமி சின்மயானந்த் இதன் சேர்மனாக உள்ளார். இந்த கல்லூரியில் எல்.எல்.எம். படித்த ஒரு பெண், கடந்த மாதம் 28ம் தேதியன்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பதிவிட்டார். அதில் அவர் முகத்தை மறைத்தபடி அழுது கொண்டே பேசியிருந்தார்.

தான் சுக்தேவானந்த் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்த போது, தனக்கு சின்மயானந்த் பகுதி நேர வேலை கொடுத்ததாக கூறியிருந்தார். கல்லூரியில் வேலை முடிய இரவு நேரமாகி விடும் என்பதால், கல்லூரி விடுதியில் தங்கியதாகவும், அப்போது தன்னை மிரட்டி சின்மயானந்த் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார். தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், ஓடி ஒளிந்து கொண்டு வருவதாக கூறி, சின்மயானந்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்பின், உ.பி. மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால், எப்.ஐ.ஆரில் சின்மயானந்த் பெயர் சேர்க்கப்படவில்லை. இதற்கு பிறகு அந்த மாணவியை ராஜஸ்தானில் கண்டுபிடித்த உ.பி. போலீசார், அவரை சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, உ.பி.யில் சிறப்பு புலனாய்வுக் குழு அந்த மாணவி சொன்ன பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், அந்த மாணவி நேற்று(செப்.9) டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். முகத்தை மறைத்தவாறு அந்த பெண் கூறியதாவது:

சின்மயானந்த் என்னை ஓராண்டாக மிரட்டி, மிரட்டியே பலாத்காரம் செய்தார். நான் உயிருக்கு பயந்து அவரை எதிர்க்க முடியாமல் தவித்தேன். இதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. என்னை போல் பல மாணவிகள் அவருக்கு இரையாகியுள்ளனர். யாராலும் அவரைப் பற்றி வெளியில் சொல்ல முடியவில்லை. கடைசியில் நான் ஷாஜஹான்பூர் போலீசில் புகார் கொடுத்தேன். போலீசார் அதை ஏற்க மறுத்து விட்டனர். அதனால், டெல்லியில் லோதி ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். கார்கார்டூம் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளேன்.

எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால், நான் மறைந்து மறைந்து வாழ வேண்டியுள்ளது. உத்தரபிரதேசப் போலீசார் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அங்கு விசாரணை நடந்தால் சின்மயானந்த் தப்பி விடுவார்.
இவ்வாறு அந்த மாணவி கூறினார்.

You'r reading சின்மயானந்த் ஓராண்டாக என்னை பலாத்காரம் செய்தார்.. சட்டமாணவி பகீர் குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 1984ல் சீக்கியர்கள் மீது தாக்குதல்.. கமல்நாத் மீது கலவர வழக்கு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்