பொருளாதாரத்தில் இந்திய நிபுணருக்கு நோபல் பரிசு

Abhijit Banerjee share Nobel Prize in economics with his wife Esther Duflo and Michael Kremer

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான இயற்பியல், வேதியில், இலக்கியத் துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று(அக்.14) அறிவிக்கப்பட்டது. இது, அமெரிக்காவில் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றும் அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் சக ஆய்வாளர் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு்ள்ளது. இவர்கள் உலகளாவிய வறுமை ஒழிப்புக்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல திட்டங்களை வகுத்தவர்கள். இவர்களுக்கு நோபல் பரிசு பட்டயத்துடன் 11 லட்சம் டாலர்(சுமார் ரூ.7கோடி) சமமாக பிரித்து வழங்கப்படும்.
அபிஜித் பானர்ஜி, மும்பையில் 1961ல் பிறந்தவர்.

கொல்கத்தா பிரசிடென்சி பல்கலைக்கழகத்திலும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் படித்தவர். இவரது மனைவி எஸ்தர் டப்லோ, பிரான்சில் பிறந்தவர். இவரும் பொருளாதார துறையில் நிபுணர். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இவர்கள் இருவரும் சேர்ந்து, செந்தில் முல்லைநாதன் என்பவருடன் இணைந்து அப்துல் லத்தீப் ஜலீல் வறுமை ஒழிப்பு ஆய்வகம் என்ற அமைப்பை நிறுவி, வறுமை ஒழிப்பு முன்னோடி திட்டங்களை வகுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் உள்ளிட்ட மூவருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டார் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

You'r reading பொருளாதாரத்தில் இந்திய நிபுணருக்கு நோபல் பரிசு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமித்ஷா மகன் செய்தால் சரியா? இதே நான் ஆகியிருந்தால்.. கார்த்தி சிதம்பரம் கிண்டல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்