மகாராஷ்டிர முதல்வர் பட்நாவிஸ் ராஜினாமா.. அஜித்பவாரும் விலகினார்..

Devendra Fadnavis resigns as Maharashtra chief minister

சிவசேனா கூட்டணியை இப்போதைக்கு அசைக்க முடியாது என்பதை உணர்ந்த பாஜக பணிந்தது. முதல்வர் பதவியில் இருந்து பட்நாவிஸ் ராஜினாமா செய்தார்.

மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 56 எம்.எல்.ஏ.க்களை வென்றிருந்த சிவசேனா கட்சி, முதல்வர் பதவியை கேட்டது. தேர்தல் உடன்பாட்டின் போதே முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டு காலம் சிவசேனாவுக்கு தருவதாக பாஜக ஒப்புக் கொண்டிருந்ததாகவும் கூறியது.

ஆனால், இதை பாஜக மறுத்தது. 105 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்தான் முதல்வர் என்று அறிவித்தது. இதையடுத்து கூட்டணி முறிந்தது.
இதன்பின், தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா முயன்றது. மூன்று கட்சிகளும் 10 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பார் என்று முடிவு செய்தன. இதை கடந்த 22ம் தேதி மாலையில் என்.சி.பி. தலைவர் சரத்பவார் அறிவித்தார்.

ஆனால், மறுநாள் 23ம் தேதி அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், திடீரென பாஜக பக்கம் தாவினார். என்.சி.பி. கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக இருந்த அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்குமாறு கோஷ்யாரி அழைத்தார். கடந்த 23ம் தேதி காலை 7.30 மணிக்கு முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

அதற்கு பிறகு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து தங்கள் கூட்டணியில் மாற்றமில்லை என்றனர். மேலும், தங்கள் கூட்டணியில் 162 எம்.எல்.ஏக்கள் உள்ளதாக கூறி, நட்சத்திர ஓட்டலில் அணிவகுப்பு நடத்தினர்.

இதற்கிடையே, சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அம்மாநில சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்கு பட்நாவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, இன்று(நவ.26) இரவு 9 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பாக துணை முதல்வர் அஜித்பவார் பதவி விலகினார். தொடர்ந்து, முதல்வர் பட்நாவிசும் கவர்னரை சந்தித்து ராஜினாமா செய்தார். முன்னதாக, பட்நாவிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் இப்போது ராஜ்பவன் சென்று ராஜினாமா செய்யப் போகிறேன். புதிதாக யார் பொறுப்பேற்கிறார்களோ அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால், புதிய அரசு நிலையான அரசாக இருக்காது. காரணம், அவர்களுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கிறது என்றார்.

You'r reading மகாராஷ்டிர முதல்வர் பட்நாவிஸ் ராஜினாமா.. அஜித்பவாரும் விலகினார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நித்தியானந்தாவிடம் நெருக்கமா? நெட்டில் டென்ஷன் ஆன  பாடகி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்