காந்தியை கொன்ற கோட்சே தேசபக்தர்.. மக்களவையில் பாஜக பேச்சு..

Now in Lok Sabha, Pragya Thakur calls Nathuram Godse a deshbhakt

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்று மக்களவையில் பாஜக உறுப்பினர் பிரக்யா தாக்குர் குறிப்பிட்டார். திமுக உறுப்பினர் ஆ.ராசா பேச்சில் குறுக்கிட்டு அவர் இதை சொன்னார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. எஸ்.பி.ஜி. பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நேற்று(நவ.27) தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி.(கறுப்பு பூனை படை) பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதே போல், மன்மோகன்சிங் உள்பட முன்னாள் பிரதமர்களுக்கும் இந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. அவர்களுக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு தரப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான், பிரதமருக்கு மட்டுமே எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்கப்படும் என்ற திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாவின் மீது திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், அரசியல் காரணங்களுக்காக சிறப்பு பாதுகாப்பை விலக்கிக் கொள்ளக் கூடாது. ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னர் அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பை விலக்கியது தவறு. மகாத்மா காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் நாதுராம் கோட்சே, 32 ஆண்டுகளாக காந்தி மீது ஆத்திரம் கொண்டிருந்ததாக கூறியிருந்தார். அவர் ஒரு குறிப்பிட்ட மதக் கொள்கையை கடைபிடிப்பவர். அதனால், அவர் தனது விரோதத்தை பல ஆண்டுகளாக வைத்திருந்தார்... என்று குறிப்பிட்டார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, பாஜக உறுப்பினர் பிரக்யா தாக்குர் குறுக்கிட்டு, நீங்கள் ஒரு தேசபக்தரை(நாதுராம் கோட்சே) உதாரணமாக சொல்லக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். உடனே, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து, பிரக்யா தாக்குர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு, பாஜக உறுப்பினர்கள், பிரக்யாவை அமைதிப்படுத்தி உட்கார வைத்தனர்.

You'r reading காந்தியை கொன்ற கோட்சே தேசபக்தர்.. மக்களவையில் பாஜக பேச்சு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உத்தவ் தாக்கரே நாளை முதல்வராக பதவியேற்பு.. என்.சி.பி.க்கு துணை முதல்வர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்