மாபியாவுக்கு எதிராக கமல்நாத் செயல்பட்டதால் ஆட்சியைக் கவிழ்ப்பு.. திக்விஜயசிங் குற்றச்சாட்டு..

மத்தியப் பிரதேசத்தில் மாபியா கும்பலுக்கு எதிராக முதல்வர் கமல்நாத் செயல்பட்டதால், காங்கிரஸ் ஆட்சியை மத்திய பாஜக அரசு கவிழ்க்கிறது. பாஜகவின் இந்த சதித் திட்டத்திற்கான ஆதாரம் உள்ளது என்று திக்விஜயசிங் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், காங்கிரசுக்கு ஒரு இடமும், பாஜகவுக்கு ஒரு இடமும் எளிதாகக் கிடைக்கும். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், சுயேச்சைகள் ஆதரவில் காங்கிரசுக்கு 2வது இடம் கிடைக்கும். தற்போது 2வது இடத்தை கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. மேலும், கமல்நாத் அரசைக் கவிழ்க்கவும் திட்டமிட்டது.

இந்த சூழ்நிலையில், ம.பி. காங்கிரசில் முக்கிய தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவை பாஜக வளைத்து விட்டதாகவும், அவருடன் காங்கிரஸ் கட்சியின் 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாகவும், அவர்கள் கர்நாடகாவில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் நேற்றிரவு தகவல் வெளியானது.

இதையடுத்து, நேற்றிரவு கமல்நாத் வீட்டில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்பின், 20 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். புதிய அமைச்சர்களை கமல்நாத் நியமிப்பார் என்று கூறினர். இதில், சிந்தியாவுடன் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி தரப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், காங்கிரசின் நிலைமை கையை மீறிப் போய் விட்டது. இன்று(மார்ச்10) காலையில் ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடனிருந்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர், ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் கட்சியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், போபாலில் முதல்வர் கமல்நாத் வீட்டில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதற்குப் பின்னர், காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜயசிங், நிருபர்களிடம் கூறுகையில், ம.பி.யில் மாபியா கும்பலுக்கு எதிராக முதல்வர் கமல்நாத் தீவிர நடவடிக்கை எடுத்தார். இதனால்தான், ஆட்சியைக் கவிழ்க்கிறார்கள். இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகக் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கர்நாடகாவுக்கு கடத்திச் செல்ல 3 தனி விமானங்களை பாஜக ஏற்பாடு செய்திருக்கிறது. அவர்களின் இந்த சதித் திட்டத்திற்கான ஆதாரங்கள் உள்ளன என்றார்.

You'r reading மாபியாவுக்கு எதிராக கமல்நாத் செயல்பட்டதால் ஆட்சியைக் கவிழ்ப்பு.. திக்விஜயசிங் குற்றச்சாட்டு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காங்கிரசில் இருந்து சிந்தியா விலகல்.. ம.பி. ஆட்சி கவிழ்ப்பு.. சோனியா அதிர்ச்சி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்