சபாநாயகர் நோட்டீசை எதிர்த்து சச்சின்பைலட் ஐகோர்ட்டில் மனு.. இன்று மாலை விசாரணை..

Sachin Pilot moves court against Rajasthan speakers disqualification notice

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் இருந்தார். அவர், தன்னை முதல்வராக்க வேண்டுமென்று காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். இந்நிலையில், பைலட்டை வளைத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டது. இதற்கேற்ப, பைலட்டும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை அழைத்துச் சென்று டெல்லியில் முகாமிட்டார். மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க ஜோதிராதித்ய சிந்தியா எப்படிச் செயல்பட்டாரோ அதே போன்று பைலட்டும் செயல்பட்டார்.

ஆனால், ம.பி.யில் சிந்தியாவுக்கு கை கொடுத்த நம்பர் கணக்கு பைலட்டுக்கு இல்லை. ஜெய்ப்பூரில் காங்கிரஸ் நடத்திய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் கெலாட்டுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. 200 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபையில் தொடர்ந்து கெலாட்டுக்கு மெஜாரிட்டி உள்ளது. இதனால், பைலட்டுடன் சென்ற 4 எம்.எல்.ஏ.க்கள் பின்வாங்கி, மீண்டும் கெலாட் முகாமிற்கு வந்தனர்.இந்நிலையில், பைலட் ஆதரவாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் தரப்பில் மேலும் ஒரு கணக்குப் போட்டுள்ளனர். அதாவது, 2 முறை நடத்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டங்களுக்கு வராதது ஏன்? என்று கேட்டு பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் சி.பி.ஜோஷி ஒரு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை அந்த எம்.எல்.ஏ.க்களின் வீடுகளில் ஒட்டினர். நோட்டீசுக்கு 2 நாளில் பதிலளிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

அவர்கள் என்ன பதில் அளித்தாலும் அதை ஏற்காமல் அவர்களின் எம்.எல்.ஏ. பதவியை பறித்து விடலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். அப்படி 19 பேரையும் தகுதி நீக்கம் செய்தால், சட்டசபையின் மொத்த பலம் 181 ஆகக் குறைந்து விடும். அப்போது மெஜாரிட்டிக்கு 91 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே போதும். எனவே, கெலாட் அரசு தப்பி விடும் என்று கணக்குப் போட்டுள்ளார்கள்.இதற்கிடையே, சச்சின் பைலட், நான் பாஜகவில் சேர மாட்டேன். நான் இன்னமும் காங்கிரசில்தான் இருக்கிறேன் என்று பல்டி அடித்தார். மேலும், சபாநாயகர் ஜோஷி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ. பிருத்விராஜ் மீனா, இன்று(ஜூலை16) ராஜஸ்தான் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், சச்சின் பைலட் உள்பட 19 பேருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்யக் கோரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று மாலையில் விசாரணைக்கு வரவுள்ளது.

You'r reading சபாநாயகர் நோட்டீசை எதிர்த்து சச்சின்பைலட் ஐகோர்ட்டில் மனு.. இன்று மாலை விசாரணை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஃபாய்பிரண்டை நினைத்து காதல் ஏக்கத்தில் தவிக்கும் விஜய், அஜீத் நடிகை.. கட்டிப்பிடித்த படத்தை வெளியிட்டு மெசேஜ்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்