பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு.. அத்வானி, ஜோஷிக்கு தண்டனை கிடைக்குமா?

Babri demolition case Judgement today.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி - ராமர் கோயில் நிலத்தகராறு இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தது. நீண்ட காலமாக இருந்த பாபர் மசூதி, ராமர் பிறந்த இடம் என்று இந்து அமைப்புகள் கோரி வந்தன.

கடந்த 1992-ம்ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பல்லாயிரக்கணக்கான கரசேவகர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் பாபர் மசூதியை இடித்தனர். அப்போது பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் நேரடியாக அங்குச் சென்றிருந்தனர்.

அப்போது மத்தியில் பிரதமர் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியும், உ.பி.யில் முதல்வர் கல்யாண்சிங் தலைமையில் பாஜக ஆட்சியும் நடைபெற்றது. இரு ஆட்சியினரும் பாபர் மசூதி இடிக்கப்படும் வரை அதைத் தடுக்க தவறி விட்டனர்.இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதை சிபிஐ விசாரித்தது. அவர்கள் உள்பட 49 பேர் மீது குற்றம்சாட்டி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பின்னர், குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் 17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இன்று இந்த வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் இறுதித் தீர்ப்புக் கூறவிருக்கிறார். அத்வானி உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகின்றனர்.இந்த தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி, அனைத்து மாநிலங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

You'r reading பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு.. அத்வானி, ஜோஷிக்கு தண்டனை கிடைக்குமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னை, கோவை மண்டலங்களில் மட்டுமே கொரோனா பரவல் அதிகரிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்