தங்கக் கடத்தல் முதல்வரின் அலுவலகத்தில் உள்ள மேலும் சிலருக்கு தெரியும்.. ஸ்வப்னா அதிரடி

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் தவிர முதல்வர் அலுவலகத்தில் உள்ள மேலும் சிலருக்கு தெரியும் என்று இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் மத்திய அமலாக்கத் துறையிடம் தெரிவித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயனுக்கு அடுத்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் நெருக்கமாக இருந்ததாக புகார் வெளியானதை தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது இவர் மத்திய அமலாக்கத் துறையின் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

முதலில் 7 நாட்களும், பின்னர் 5 நாட்களும் சிவசங்கரை காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த விசாரணையில் அமலாக்கத் துறைக்கு பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களாக திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னாவிடமும் சிறையில் வைத்து மத்திய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் ஸ்வப்னா மேலும் சில முக்கிய விவரங்களை அளித்துள்ளார். இந்நிலையில் சிவசங்கரின் காவல் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து அவரை இன்று அமலாக்கத் துறையினர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மத்திய அமலாக்கத்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறியிருப்பது: ஸ்வப்னாவிடம் நடத்திய விசாரணையில் சில முக்கிய விவவரங்கள் கிடைத்துள்ளன. தங்கக் கடத்தல் குறித்து சிவசங்கர் மட்டுமில்லாமல் முதல்வர் அலுவலகத்தில் உள்ள மேலும் சிலருக்கு தெரியும் என்று அவர் தெரிவித்தள்ளார். எனவே இந்த விவரங்களை உறுதி செய்வதற்காக சிவசங்கரிடம் கூடுதலாக விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இதனால் சிவசங்கரை மேலும் ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சிவசங்கரை மேலும் ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்தது. இந்த விசாரணையில் மேலும் பல முக்கிய விவரங்கள் கிடைக்கும் என கருதப்படுகிறது. தங்க கடத்தல் குறித்து சிவசங்கர் மட்டுமில்லாமல் முதல்வர் அலுவலகத்தில் உள்ள மேலும் சிலருக்கு தெரியும் என்று ஸ்வப்னா கூறியிருப்பது கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading தங்கக் கடத்தல் முதல்வரின் அலுவலகத்தில் உள்ள மேலும் சிலருக்கு தெரியும்.. ஸ்வப்னா அதிரடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிக் பாஸின் புதிய டாஸ்க்.. திருடர்கள் கூட்டம்.. 38வது நாளன்று என்ன நடந்தது ??

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்