தங்க கடத்தல் வழக்கு கேரள ஐஏஎஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு

கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் ஜாமீன் மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.கடந்த 5 மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்குத் துபாயில் இருந்து வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தால் கேரள அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் ஓயவில்லை.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் நெருக்கமாக இருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கர் மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 29ம் தேதி திருவனந்தபுரத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை இவர் மத்திய அமலாக்கத் துறையின் காவலில் விசாரிக்கப்பட்டு வந்தார்.

காவல் முடிந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டார்.இதற்கிடையே இவர் ஜாமீன் கோரி எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீது கடந்த வாரம் விசாரணை நடைபெற்றது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், சிவசங்கர் கேரளாவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவர் ஆவார். முதல்வர் அலுவலகத்தில் மிக முக்கியமான பொறுப்பை வகித்து வந்தார். தங்கக் கடத்தல் வழக்கு உள்பட சில முறைகேடான செயல்களில் இவருக்கு முக்கிய தொடர்பு உள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் இவர் நடத்திய வாட்ஸ் அப் சாட் மூலம் பல முக்கிய விவரங்கள் கிடைத்துள்ளன. மூத்த ஐஏஎஸ் அதிகாரியான இவருக்கு ஜாமீன் வழங்கினால் அது சமூகத்திற்கு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.ஜாமீன் வழங்கினால் அவர் தலைமறைவாக வாய்ப்புண்டு. அதன் பின்னர் அவரை கைது செய்வது மிகவும் சிரமமான காரியம் ஆகிவிடும். தற்போது வழக்கு மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது. எனவே எந்தக் காரணம் கொண்டும் சிவசங்கருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று கூறினார்.

சிவசங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காகத் தொடரப்பட்ட வழக்காகும். இந்த வழக்கு சில அரசியல்வாதிகளைக் குறி வைத்து நடத்தப் பட்டு வருகிறது.சிவசங்கருக்கு எதிராக வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது. அவரை பலிகடா ஆக்கி விட்டனர். தங்கக் கடத்தல் உட்பட எந்த விவகாரத்திலும் அவருக்குத் தொடர்பு இல்லை. எனவே சிவசங்கரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம் ஜாமீன் மனு மீதான மனுவில் இன்று தீர்ப்பு அளிப்பதாகத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிவசங்கரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சிவசங்கரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading தங்க கடத்தல் வழக்கு கேரள ஐஏஎஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொல்கத்தாவில் காளி பூஜையில் கலந்துகொண்ட பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொலை மிரட்டல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்