சமூக இணையதளங்களுக்கு எதிரான அவசர சட்டம்.. கேரளாவுக்கு சிதம்பரம் கடும் கண்டனம்

சமூக இணைய தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புபவர்களுக்கு எதிராக கேரளாவில் கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக இணையதளங்களில் தனி நபருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள், மிரட்டல் விடுப்பவர்களை ஒடுக்கும் வகையில் கேரளாவில் புதிய அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி குற்றம் செய்பவர்களுக்கு 5 வருடம் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். எந்த புகாரும் இல்லாமலேயே போலீசாரால் வழக்கு பதிவு செய்ய முடியும். வாரண்டும் தேவையில்லை. இந்த புதிய அவசர சட்டத்திற்கு கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று ஒப்புதல் அளித்தார்.

சமூக இணையதளங்களில் மட்டுமல்லாமல் பத்திரிகைகள் மற்றும் டிவிக்களில் வெளியாகும் கருத்துக்களுக்கு கூட இந்த சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்ய முடியும். இந்த புதிய சட்டத்திற்கு காங்கிரஸ், பாஜக உள்பட கேரளாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரள அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை ஒடுக்குவதற்கும், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாலும் தான் இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. ஆனால் இந்த புதிய சட்டத்தால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், பத்திரிகைகள் மற்றும் டிவிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சமூக இணையதளங்களில் தேவையில்லாமல் பெண்கள் மற்றும் தனி நபருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது மட்டுமே இந்த புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கேரள அரசின் இந்த புதிய அவசர சட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பா.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரள அரசின் இந்த புதிய சட்டம் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. இந்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கேரள அரசின் இந்த புதிய சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மது பார் ஊழல் வழக்கில் காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளதற்கும் சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

You'r reading சமூக இணையதளங்களுக்கு எதிரான அவசர சட்டம்.. கேரளாவுக்கு சிதம்பரம் கடும் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எஸ்.ஏ.சந்திரசேகர் துவக்கிய கட்சி பணால்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்