சடலத்தின் கண்களை தின்ற எலிகள்: ரயில்வே போலீஸ் மீது வழக்கு

ரயிலில் பயணித்தபோது மரணம் அடைந்தவரின் உடலை இறக்கிய ரயில்வே போலீஸார், இரவில் விட்டுச்சென்றபோது சடலத்தின் கண்களை எலிகள் தின்றுள்ளன. மரணமடைந்தவரின் குடும்பத்தினர் ரயில்வே போலீஸின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆக்ராவை சேர்ந்தவர் ஜிதேந்திர சிங் (வயது 33). இவர் கர்நாடகா விரைவு ரயிலில் பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு பயணித்துள்ளார். கடந்த வியாழனன்று ஜிதேந்திர சிங் சுயநினைவை இழந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்துவிட்டதாக கூறியதால், உடலை மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் அருகிலுள்ள இட்டார்சி என்ற பெரிய ரயில் நிலையத்தில் போலீஸார் இறக்கியுள்ளனர். இட்டார்சி, பெரிய சந்திப்பு ரயில் நிலையமாயினும் அங்கு அமரர் அறை இல்லை.

மாதந்தோறும் இதுபோன்று நான்கு முதல் ஆறு சடலங்கள் ரயிலிலிருந்து இங்கு இங்கு இறக்கப்படுவதாக கூறப்படுகிறது. வியாழன் அன்று இரவு 11:30 மணியளவில் சடலத்தை இறக்கிய போலீஸார், அங்கிருந்த குடிசை ஒன்றில் அதை வைத்துவிட்டு சென்றுள்ளனர். தகவல் அறிந்து மறுநாள் பிற்பகல் ஜிதேந்திர சிங்கின் குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, சடலம் பாதிப்புக்குள்ளாகியிருப்பதை கண்டுள்ளனர். சடலத்தின் கண்களை எலிகள் தின்றிருந்தன. அமரர் அறை இல்லாத காரணத்தினால் இரவில் இறக்கப்படும் சடலங்களை அக்குடிசையில் வைப்பது வழக்கம் என்றும் இதுவரை எந்தப் பாதிப்பும் நடந்ததில்லை என்றும், ஒருவரை காவலுக்கு வைத்திருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஜிதேந்திர சிங்கின் குடும்பத்தினர் கவனக்குறைவாக இருந்ததாக ரயில்வே போலீசார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

You'r reading சடலத்தின் கண்களை தின்ற எலிகள்: ரயில்வே போலீஸ் மீது வழக்கு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உங்களுக்கான வேலைவாய்ப்பு கனரா வங்கியில்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்