பினராயி விஜயனுக்கு நெருக்கமான மேலும் ஒரு அதிகாரிக்கு மத்திய அமலாக்கத்துறை செக்

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், பினராயி விஜயனுக்கு நெருக்கமான இன்னொரு அதிகாரியான ரவீந்திரனை விசாரணைக்கு ஆஜராகக் கூறி மத்திய அமலாக்கத் துறை மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய விவகாரம் வெளிவந்து 5 மாதங்களுக்கு மேல் ஆன பின்னரும் இன்னும் பரபரப்பு ஓயவில்லை.

இந்த வழக்கில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் தொடர்பு இருந்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கரை மத்திய அமலாக்கத் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் சுங்க இலாகாவும் நேற்று சிவசங்கரை கைது செய்தது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சிவசங்கர் தவிரக் கேரள முதல்வர் அலுவலகத்தை சேர்ந்த மேலும் சில முக்கிய அதிகாரிகளுக்குக் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சிவசங்கரிடம் விசாரணை நடத்தியபோது, முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளரான ரவீந்திரனுக்கும் சில விஷயங்கள் தெரியும் என்று கூறினார்.இதையடுத்து கடந்த 3 வாரங்களுக்கு முன் ரவீந்திரனிடம் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்தது. இது தொடர்பாக அவருக்கு நோட்டீசும் கொடுக்கப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறிய தேதிக்கு முந்தைய நாள் ரவீந்திரனுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் மத்திய அமலாக்கத் துறையால் ரவீந்திரனிடம் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ரவீந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது. இதையடுத்து வரும் 27ம் தேதி கொச்சியில் உள்ள மத்திய அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகக் கூறி அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ரவீந்திரன் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் மிகவும் நெருக்கமானவர் ஆவார். இந்நிலையில் அவரிடம் மத்திய அமலாக்கத் துறை விசாரணை நடத்தத் தீர்மானித்துள்ளது பினராயி விஜயனுக்கும், கேரள அரசுக்கும் மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading பினராயி விஜயனுக்கு நெருக்கமான மேலும் ஒரு அதிகாரிக்கு மத்திய அமலாக்கத்துறை செக் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. 1000 கன அடி நீர் வெளியேற்றம்.. முகாம்களில் மக்கள் தங்கவைப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்