சபரிமலையில் நாளை முதல் 5,000 பக்தர்கள் அனுமதி... ஆன்லைன் முன்பதிவு இன்று 6 மணிக்கு தொடங்குகிறது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை முதல் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இன்று மாலை 6 மணி முதல் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டலக் கால பூஜைகள் நடை பெற்று வருகின்றன. கடந்த மாதம் 16ம் தேதி முதல் மண்டலக் கால பூஜைகள் தொடங்கின. 41 நாள் நீளும் இவ்வருட மண்டலக் காலம் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது.

அன்று இரவு கோவில் நடை சாத்தப்படும். 3 நாள் இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்படும். மறுநாள் 31ம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கும். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகர விளக்குப் பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெறும். அன்று மாலை தான் சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும். இந்த மகரஜோதியைத் தரிசிப்பதற்காக வழக்கமாகச் சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

ஆனால் இவ்வருடம் கொரோனா கட்டுப்பாடு காரணமாகப் பக்தர்கள் மிகக் குறைந்த அளவிலேயே சபரிமலை வருவார்கள் எனக் கருதப்படுகிறது.இதற்கிடையே சபரிமலையில் தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 5,000 ஆக உயர்த்த வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதால் கேரள அரசு இதற்கு அனுமதி வழங்காமல் இருந்தது. இந்நிலையில் நாளை முதல் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி இன்று மாலை 6 மணி அளவில் ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். வரும் 26ம் தேதி வரை பக்தர்கள் ஆண்டிஜன் பரிசோதனை நடத்தினாலே போதுமானதாகும். அதன் பின்னர் சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

You'r reading சபரிமலையில் நாளை முதல் 5,000 பக்தர்கள் அனுமதி... ஆன்லைன் முன்பதிவு இன்று 6 மணிக்கு தொடங்குகிறது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முகத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள இந்த வழிகளை பின்பற்றுங்கள்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்