குடும்பத் தகராறில் கொடூரம்... மூத்த மகனை கழுத்தை அறுத்து கொன்று இளைய மகனுடன் தந்தை குளத்தில் குதித்து தற்கொலை...!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 11 வயதான மூத்த மகனைக் கழுத்தை அறுத்துக் கொன்று 9 வயதான இளைய மகனுடன் தந்தை கோவில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நாவாயிக்குளம் என்ற இடத்தை சேர்ந்தவர் சபீர் (40). இவருக்கு ரசியா என்ற மனைவியும், 11 வயதில் அல்தாப் என்ற மகனும், 9 வயதான அன்சார் என்ற மகனும் இருந்தனர். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர். சபீர் ஆட்டோ ஓட்டி வந்தார்.

இந்நிலையில் சபீருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் ரசியா தன்னுடைய இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு அவரது வீட்டுக்குச் சென்று விட்டார். இந்நிலையில் நேற்று தன்னுடைய மனைவியின் வீட்டிற்குச் சென்ற சபீர், இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டுக்குச் சென்றுவிட்டார். இன்று காலை சபிரீன் வீடு நீண்ட நேரமாகத் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது, அவரது மூத்த மகன் அல்தாப் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரியவந்தது.

சபீரையும், அவரது இளைய மகனையும் தேடிப் பார்த்தபோது அவர்களைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அல்தாபின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். மாயமான சபீரையும் அவரது இளைய மகனையும் பல இடங்களில் தேடினர். இதில் சபீரின் ஆட்டோ அங்குள்ள ஒரு கோவில் குளத்தின் அருகே நிற்பது தெரியவந்தது. இதையடுத்து சபீர் குளத்தில் குதித்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் குளத்தில் தேடிப் பார்த்தபோது சபீர் மட்டுமல்லாமல் அவரது இளைய மகன் அன்சாரின் உடலும் கிடைத்தது.

இருவரின் உடல்களைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காகத் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத் தகராறில் மூத்த மகனைக் கழுத்தை அறுத்துக் கொன்று சபீர் தன்னுடைய இளைய மகனையும் குளத்தில் வீசி விட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மகன்களைக் கொன்று தந்தை குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading குடும்பத் தகராறில் கொடூரம்... மூத்த மகனை கழுத்தை அறுத்து கொன்று இளைய மகனுடன் தந்தை குளத்தில் குதித்து தற்கொலை...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்