வெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் கேரள சபாநாயகரிடம் விரைவில் சுங்க இலாகா விசாரணை

வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாக கூறப்படும் புகார் தொடர்பாக கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் சுங்க இலாகா விரைவில் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக இன்னும் ஒருசில தினங்களில் அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் சபாநாயகரிடம் விசாரணை நடத்தினால் அது பினராயி விஜயன் தலைமையிலான ஆளுங்கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பரபரப்பு கேரளாவில் இன்னும் ஓயவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறை ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.

அமீரக தூதரகத்தில் துணைத் தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அமீரக தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்த சரித்குமார் ஆகிய இருவரும் தான் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர். இவர்கள் வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு தங்கத்தை கடத்தியதோடு மட்டுமில்லாமல், அமீரக பார்சலில் வெளிநாட்டுக்கு கேரளாவில் இருந்து டாலர்கள் கடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர்கள் கேரளாவில் உள்ள சில முக்கிய அரசியல் பிரமுகர்களுக்காகவும் டாலர்களை கடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் என்று தெரியவந்தது. சுங்க இலாகா பலமுறை நடத்திய விசாரணையிலும் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்ககாக டாலர்களை கடத்தியதாக இவர்கள் கூறினர்.

இதையடுத்து சபாநாயகரிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா தீர்மானித்தது. அதற்கு முன்னதாக அவரது உதவியாளரான ஐயப்பன் என்பவரிடம் சுங்க இலாகா 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த கட்டமாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் கொடுக்க சுங்க இலாகா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் சபாநாயகரிடம் விசாரணை நடத்தினால் அது கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

You'r reading வெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் கேரள சபாநாயகரிடம் விரைவில் சுங்க இலாகா விசாரணை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாடாளுமன்ற தாக்குதல் போல அமெரிக்காவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுமா? கண்காணிப்பு தீவிரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்