சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை - குடியரசுத் தலைவர் ஒப்புதல்

சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை

சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

காஷ்மீரின் கதுவாவில் சிறுமி ஒருவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இதேபோல, உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் 17வயது சிறுமி எம்.எல்.ஏ. உள்ளிட்டோரால் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் பெரும் அதிச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை 17-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் மக்களுக்கு கடுமையான கோபத்தையும் ஏற்படுத்தியது.

இவ்வாறு, சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 21–ஆம் தேதி மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. பின்னர் இந்த அவசர சட்டத்துக்கு பதிலாக புதிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்தது.

குற்றவியல் சட்டம் (திருத்தம்) மசோதா 2018 என்ற இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மசோதாவுக்கு, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இந்த சட்டம், கடந்த ஏப்ரல் 21–ஆம் தேதி முதலே அமலுக்கு வந்ததாக கருதப்படும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம், வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வழிவகை செய்கிறது. குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை வழங்கப்படும். இதில் குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டு அல்லது வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை - குடியரசுத் தலைவர் ஒப்புதல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கருணாநிதி சமாதிக்கு வந்து மரியாதை செலுத்தினார் நடிகர் விஜய்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்