பெண்கள்-குழந்தைகளை பாதுகாக்கும் பிரத்யேக ஆப்-க்கு வரவேற்பு

பெண்கள்-குழந்தைகளை பாதுகாக்கும் பிரத்யேக ஆப்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறை அறிமுகம் செய்த பிரத்யேக செயலிக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழக காவல்துறை 'காவலன் எஸ்.ஓ.எஸ்' என்ற புதிய செயலியை கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து கொண்டால், ஆபத்து மற்றும் பேரிடர் காலங்களில் காவல்துறையின் உதவியை ஐந்து வினாடிகளில் பெறமுடியும் எனக் கூறப்படுகிறது.

காவல்துறை உதவி மட்டுமல்லாமல் உறவினர்கள் நண்பர்களின் உதவியையும் இந்த ஆப் மூலமாக பெற முடியும் என்பதுதான் கூடுதல் சிறப்பம்சமாகும். கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஐஒஎஸ் (IOS) என இரண்டு இயங்குதளங்களிலும் இந்த ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்பை முதலில் பதிவிறக்கம் செய்த பின் கட்டாயமாக கொடுக்க வேண்டிய தகவல்கள் உங்கள் கைப்பேசி எண் மற்றும் வீட்டு முகவரி இவற்றை சரியாக பூர்த்தி செய்தவுடன், செயலியின் உள்ளே செல்லலாம். அதன் பின்பு உங்கள் தொலைபேசி எண் அல்லாமல் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் என மூன்று பேரின் தொலைபேசி எண்களையும் இதில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த உறவினர்கள் உங்களுக்கு என்ன உறவு வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்படும் அதையும் பதிவு செய்த பிறகு நேரடியாக எஸ் ஒ எஸ் என்ற பெரிய அளவிலான சிகப்பு நிற பட்டன் தெரியும்.

இந்த பட்டனை ஆபத்து காலங்களில் ஒரு தடவை அழுத்தினாள் ஐந்து வினாடி கவுண்டவுன் தொடங்கும் அந்த ஐந்து வினாடிகளுக்குப் பிறகு போலீஸாரிடம் இருந்து உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரும் அவர்களிடம் என்ன மாதிரியான பிரச்சினையில் நீங்கள் இருக்கிறீர்கள், எந்த இடத்தில் இருக்கிறீர்கள் போன்ற தகவல்க்ளை கூற வேண்டும் அதன் அடிப்படையில் நீங்கள் இருக்கக்கூடிய அந்த இடம் ஜிபிஎஸ் மூலமாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும் அங்கிருந்து அருகில் உள்ள காவல் துறை ரோந்து வாகனம் உங்கள் உதவிக்காக அனுப்பிவைக்கப்படும்.

தமிழ்நாடு காவல் மாநில கட்டுப்பாட்டு அறையில் இதெற்கென 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு காவலன் ஆப் மூலமாக தகவல் பெறப்பட்டு காவல்துறையின் உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

காவலன் எஸ்.ஓ.எஸ் செயலியை, இதுவரை 10,000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். வேலைக்கு செல்லும் பெண்கள், தனியாக வசிக்கும் முதியவர்கள் குழந்தைகள் என அனைவருக்கும் பயனுள்ளதாக இருப்பதாக கூறப்படுகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஆப்பை வேடிக்கையாகவோ விளையாட்டுக்காகவோ பயன்படுத்த வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. உண்மையாகவே ஆபத்தில் இருப்பவர்கள் அல்லது பேரிடர் காலத்தில் சிக்கியவர்கள் இந்த காவலன் மொபைல் ஆப் பை உபயோகித்து பயனடையுமாறு காவல்துறை சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You'r reading பெண்கள்-குழந்தைகளை பாதுகாக்கும் பிரத்யேக ஆப்-க்கு வரவேற்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்