இரட்டை இலை வழக்கில் நாளை தீர்ப்பு...! யாருக்கு சாதகம் என அதிமுக, அமமுகவில் பெரும் எதிர்பார்ப்பு!

Delhi high court judgement tomorrow on two leaves case

இரட்டை இலை வழக்கில் இறுதித் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு அதிமுக மற்றும் அமமுகவில் நிலவுகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகள் உருவானது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது இரு அணிகளும் இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடியதால் சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம் .

பின்னர் இரு அணிகளும் இணைந்து இரட்டை இலையை அதிமுகவுக்கு ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவும், தினகரனும் எதிர்ப்பு தெரிவித்ததால், பல்வேறு ஆவணங்களை தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இறுதியில் கடந்த 2017 நவம்பரில் மதுசூதனன் அவைத் தலைவராக இருக்கும் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்த அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

அதிமுக தரப்புக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து சசிகலாவும், தினகரனும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கு விசாரணை கடந்த 8-ந்தேதி முடிவடைந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது டெல்லி உயர்நீதிமன்றம் .

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு அறிவிக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஏற்கனவே குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தினகரன் தொடர்ந்த வழக்கில், இரட்டை சிலை சின்ன வழக்கை ஒரு மாதத்தில் முடிக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. இந் நிலையில் நாளை தீர்ப்பு வெளியாவதால் அதிமுக, அமமுக கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

You'r reading இரட்டை இலை வழக்கில் நாளை தீர்ப்பு...! யாருக்கு சாதகம் என அதிமுக, அமமுகவில் பெரும் எதிர்பார்ப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மீடியாவால் இதை நிறுத்த முடியும்.... இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்துக்கு மாதவன் சொல்லும் ஐடியா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்