விண்வெளியில் மோடி போட்ட குண்டு... தேர்தல் நடத்தை விதி மீறலா... விசாரணை நடத்துகிறது தேர்தல் ஆணையம்

EC setup panel to probe pm modis address

விண்வெளியில் எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது குறித்து பிரதமர் மோடி பெருமையாக உரையாற்றிய விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. தேர்தல் ஆதாயத்திற்காக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

பிரதமர் மோடி நேற்று காலை 11.30 மணிக்கு டிவிட்டரில் திடீரென ஒரு பதிவை வெளியிட்டார். காலை 11.45 மணி முதல் 12.00 மணி வரை நாட்டு மக்களிடம் உரையாற்றப் போகிறேன். அப்போது ஒரு முக்கிய சேதி சொல்லப் போகிறேன் என்றிருந்தார். இந்த டிவிட்டர் பதிவு வெளியான அடுத்த நொடியே நாடு முழுவதும் ஒரே பரபரப்பானது.மோடி சொல்லப் போகும் சேதி என்னவாக இருக்கும். இதற்கு முன் பண மதிப்பிழப்பு அறிவிப்புக்காக நாட்டு மக்களிடம் உரையாற்றியது போல் இப்போது என்ன மாதிரி குண்டு போடப் போகிறாரோ? என பல்வேறு யூகங்கள் றெக்கை கட்டிப் பறந்தன.

டி.வி.க்களிலும் சிறப்பு விவாதங்கள் சூடேறின.11.45 மணிக்கு மோடி சொல்லப் போகும் சேதி என்ன? என ஒட்டுமொத்த இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் அவரது உரையை கேட்க தயாராகின. ஆனால் நிமிடங்கள் தான் கடந்த தே ஒழிய, மோடி உரையாற்ற வரவில்லை. ஒரு அரை மணி நேரம் ஒட்டு மொத்த மக்களை பதற வைத்த பின் திரையில் தோன்றினார் மோடி.

திக்.. திக்.. என மக்கள் இருக்க விண்வெளியில் இந்தியா குண்டு போட்ட விஷயத்தை மோடி சொல்ல அனைவருக்கும் சப்பென்றாகிவிட்டது. உப்புச் சப்பு இல்லாத இதற்குத்தானா இத்தனை பில்டப் என்று அடுத்த நிமிடமே கேலி கிண்டலுக்கு ஆளானார் பிரதமர் மோடி.

ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் சும்மா விடவில்லை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் வெளியிட வேண்டிய அறிவிப்பை, தேர்தல் நேரத்தில் ஆதாயத்திற்காக மோடி பயன்படுத்தலாமா? இது தேர்தல் நடத்தை விதி மீறல் இல்லையா?என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியதுடன் தேர்தல் ஆணையத்துக்கும் புகார்களை தட்டி விட்டன.

இதனால் மோடி வெளியிட்ட அறிவிப்பு தேர்தல் நடத்தை விதி மீறலா? அரசு இயந்திரத்தை பிரதமர் மோடி தவறாக பயன் படுத்தினாரா?என்பது குறித்து தீர விசாரிக்கப் போவதாகவும், இதற்காக உயர் அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

You'r reading விண்வெளியில் மோடி போட்ட குண்டு... தேர்தல் நடத்தை விதி மீறலா... விசாரணை நடத்துகிறது தேர்தல் ஆணையம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓட்டுக்காக கை, கால்களில் விழ முடியாது –பிரச்சாரத்தில் கடுகடுத்த அதிமுக எம்.பி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்