மத்திய, மாநில அரசுகள் பழி சுமத்தப் பார்க்கின்றன - துரைமுருகன் அவசர அறிக்கை

duraimurugan alleges central and state govts on revenge action against him

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் போகும் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் நாளை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் பழிவாங்கப் பார்ப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை அதிகரித்துள்ளார்.

துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். எதிரெதிரே நிற்பவர்கள் கருத்து போர் புரிவதுண்டு. அதுதான் அரசியல். எதிர்த்து நிற்பவரை தனிப்பட்ட முறையில் பழிவாங்க நினைப்பதும், வீண் பழி சுமத்தி அவமானத்திற்கு உள்ளாக்க முயற்சிப்பதும் இன்றைய அரசியலில் ஆளும் கட்சி தரப்பில் மேலோங்கி நிற்கிறது. இதற்கு ஓர் எடுத்துக் காட்டுதான் வேட்பாளர் கதிர் ஆனந்த் வீடு, கல்லூரியை வருமான வரி துறை சோதனை நடத்திய செயல். இத்தோடு நிற்கவில்லை மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள். எங்களைச் சுற்றி ஒரு கண்காணிப்பு வளையத்தை உருவாக்கி கண்காணித்தும் வருகிறார்கள்.


இதுவும் போதாது என்று மேலும் சில செயல்களில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எங்கள் வீடு, கல்லூரியில் நடந்த சோதனையில், சட்டத்திற்கு புறம்பான பொருள்கள் எதுவும் கைப்பற்ற முடியவில்லை என்பதால், எங்களை எப்படியும் பழி வாங்கியே தீருவது என்ற முடிவோடு, தேர்தல் நெருக்கத்தில் எங்களுக்கு சொந்தமான இடங்களில் அவர்களாகவே ஏதாவது பொருள்களை வைத்து விட்டு, இவர்கள் புதியதாக கண்டுபிடித்ததாகக் காட்டி எங்கள் மீது வீண் பழி சுமத்த முயற்சி நடப்பதாக அறிகிறோம்.

இதன் மூலம் கதிர் ஆனந்தின் வெற்றியை சீர் குலைத்து விடலாம் என்று இந்த அரசுகள் பெருமுயற்சிகள் எடுப்பதாக தகவல் .

இத்தகைய போக்கு ஜனநாயகத்திற்கு புறம்பானது மட்டுமல்ல , கடைந்தெடுத்த பாசிச முறையாகும் என்று துரைமுருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்வது குறித்து நாளைய தேர்தல் ஆணைய கூட்டத்தில் உறுதியான முடிவு வெளியாகும் என்றே தெரிகிறது.

You'r reading மத்திய, மாநில அரசுகள் பழி சுமத்தப் பார்க்கின்றன - துரைமுருகன் அவசர அறிக்கை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாகிறதா..? - தலைமை தேர்தல் ஆணையம் நாளை முடிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்