ஒண்ணும் சரியில்லையே.. படுஅப்செட்டான ஓபிஎஸ்... !பிரச்சாரத்தை பாதியில் ரத்து செய்து ஜூட்

OPS on upset mood, cancels election campaign in Tiruparankundram

இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம் தொகுதியில் நேற்று காலை திட்டமிட்டபடி பிரச்சாரத்தை தொடங்கிய துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக கோஷ்டி பூசலால் படு அப்செட் ஆகி பாதியில் ரத்து செய்துவிட்டது அக்கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஓபிஎஸ்சின் செல்வாக்கு இறங்கு முகமாகி விட்டது என்பது, அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் வெட்ட வெளிச்சமாகி வருகிறது. மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே தங்கமணி, வேலுமணி வகையறாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஓபிஎஸ்சை ஓரங்கட்டும் வேலையை கச்சிதமாக ஆரம்பித்து விட்டார் இபிஎஸ். பூசல் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக கூட்டணி உடன்பாடு கையெழுத்தாகும் போது மட்டுமே ஓபிஎஸ் பெயரளவுக்கு முன்னிலைப்படுத்தப்பட்டார் என்பதும் அப்போதே அரசல் புரசலாக தெரிய ஆரம்பித்து விட்டது.

எம்.பி தேர்தல், மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் தனது மகன் ரவீந்திரநாத், மற்றும் ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு மட்டுமே ஓபிஎஸ்சால் சீட் வாங்க முடிந்தது. மற்ற வேட்பாளர்கள் விஷயத்தில் எடப்பாடி கோஷ்டி கையே ஓங்கியது. அடுத்து தற்போது நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலிலும், திருப்பரங்குன்றம் தொகுதிக்காவது தனது ஆதரவாளரான முத்துராமலிங்கத்தை வேட்பாளராக்கி விட வேண்டும் என எவ்வளவோ முயன்றும், மற்ற கோஷ்டிகள் அனைவரின் ஒட்டு மொத்த எதிர்ப்பால் ஓபிஎஸ் நொந்துபோனதும் தெரிந்த சங்கதி தான்.

இதனாலேயே 4 தொகுதி வேட்பாளர் அறிவிப்பில் கையெழுத்திட்ட மறுநிமிடமே, பிரதமர் மோடியையும், பாஜக தலைவர் அமித் ஷாவையும் சந்திக்க குடும்பத்துடன் வாரணாசிக்கு பறந்தார். அங்கு நான்கைந்து நாட்கள் ஓபிஎஸ் டேரா போட்டது தான் பிரச்னை பெரிதாகி விடக் காரணமாகி விட்டது.

தேர்தலுக்குப் பின் அதிமுக அரசுக்கு ஆபத்து நேரிட்டால் தான் சேர்த்து வைத்த சொத்துக்களை காப்பாற்ற வேண்டும். வழக்கு வம்புகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக பாஜகவுக்கு தாவப் போகிறார் என்று இங்கே கொளுத்திப் போட்டு விட்டார் அமமுகவின் தங்க. தமிழ்ச் செல்வன். வாரணாசியிலிருந்து திரும்பியவுடன் மதுரை வந்த ஓபிஎஸ்சிடம், பாஜக பக்கம் போகிறீர்களாமே? என செய்தியாளர்கள் கேட்டபோது படு டென்ஷனானார் ஓபிஸ். ஆனால் கட்சிக்குள் சந்தேகப்பார்வை தொடர வேறு வழியின்றி, நான் செத்தாலும் என் மீது அதிமுக கொடிதான் போர்த்தப்படும். அந்த அளவுக்கு அதிமுகவின் விசுவாசி. கடைசி வரை நான் அதிமுகதான் என்றெல்லாம் உருக்கமாக 4 பக்கத்திற்கு அறிக்கை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் ஓபிஎஸ்.

இந்த பரபரப்பான அறிக்கை வெளியிட்ட மறுநாளான நேற்று, கட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டப் படி, திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கிளம்பினார். ஆனால் மதுரையில் உள்ள அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயக்குமார், மாவட்டச் செயலாளர் ராசன்செல்லப்பா போன்றோர், ஓபிஎஸ் பிரச்சாரத்திற்கு போதிய தடபுடல் ஏற்பாடு செய்யாமல் சொதப்பி, ஏனோ தானோவென்று ஒப்புக்கு ஆஜராகியுள்ளனர்.இது போதாதென்று ஓபிஎஸ் தீவிர ஆதரவாளரான முத்துராமலிங்கம் உள்ளிட்ட அவரது விசுவாசிகள் பலருமே தலைகாட்டவில்லை. மேலும் பிரச்சாரத்திலும் போதிய ரெஸ்பான்ஸ் இல்லை. இதனால் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் வேட்பாளர் முனியாண்டி ஆகியோரை வேனில் ஏற்றி சிலைமான், விரகனூர் என சில இடங்களில் மட்டும் பெயரளவுக்கு பிரச்சாரம் செய்து விட்டு ஓட்டலுக்கு திரும்பி விட்டார். ஓட்டலுக்கு மதுரை மாவட்ட அமைச்சர்கள், மாவட்டஅதிமுக நிர்வாகிகளை அழைத்து பெரிய பஞ்சாயத்து வைத்த ஓபிஎஸ், மாலையில் திட்டமிட்டிருந்த பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு கோவைக்கு கிளம்பிச் சென்று விட்டார். 2 வருடங்களுக்கு முன்பு சசிகுலா குரூப்பால் ஓரம் கட்டப்பட்டு, அம்மா சமாதியில் தியானம் செய்த பின் கெத்தாக தர்மயுத்தம் செய்த போது கலங்காத ஓபிஎஸ், இப்போது கட்சிக்குள் ஓரங்கட்டப்படுவதால் படு அப்செட்டில் இருப்பது உண்மை தான் என்கின்றனர் அவரது விசுவாசிகள் .

‘‘பா.ஜ.க.வில் ஓ.பி.எஸ். சேருவது 100% உண்மை’’ தங்கத்தமிழ்ச் செல்வன் பேட்டி!

You'r reading ஒண்ணும் சரியில்லையே.. படுஅப்செட்டான ஓபிஎஸ்... !பிரச்சாரத்தை பாதியில் ரத்து செய்து ஜூட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை: வேகம் எடுக்கும் ராமலிங்கம் கொலை வழக்கு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்