2ஜி ஸ்பெக்ட்ரம் அப்பீல் வழக்கில் ராசா, கனிமொழிக்கு நோட்டீஸ்

Delhi High Court seeks Raja, others response on 2G early hearing plea

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று சி.ஏ.ஜி. அறிக்கை அளித்தது. இதைத் தொடர்ந்து, அப்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்பட பலர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. சி.பி.ஐ. தனியாகவும், அமலாக்கப் பிரிவு தனியாகவும் வழக்கு தொடர்ந்தன.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்த வழக்குகளில், ஆ.ராசா, கனிமொழி உள்பட 19 பேரை விடுதலை செய்து கடந்த 2017-டிசம்பர் 21-ந்தேதி சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை, சிபிஐ சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தற்போது, 2ஜி மேல்முறையீடு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. சிபிஐ மனு தொடர்பாக பதிலளிக்க ஆ.ராசா உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு ஜூலை 30 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

You'r reading 2ஜி ஸ்பெக்ட்ரம் அப்பீல் வழக்கில் ராசா, கனிமொழிக்கு நோட்டீஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோடியின் நால்வர் அணி எது?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்