12 வருமான வரி கமிஷனர்களை வீட்டுக்கு அனுப்பியது மத்திய அரசு

Govt compulsorily retires a dozen senior tax officers

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 12 வருமான வரித் துறை கமிஷனர்களை கட்டாய ஓய்வி்ல் செல்ல மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் சி.பி.ஐ. இயக்குனர், கூடுதல் இயக்குனர் உள்பட பல உயர்பதவிகளில் இருப்பவர்கள் மீதே கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர்களில் சிலருக்கு பிரதமர் அலுவலக அதிகாரிகளே ஆதரவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி, சர்ச்சைகளை ஏற்படுத்தின.

ஆனால், இந்த முறை பிரதமர் மோடி, ஊழல் அதிகாரிகளை ஒதுக்குவதில் தீவிரமாக களமிறங்கியுள்ளதாக தெரிகிறது. மத்திய அரசு அதிகாரிகளுக்கான அடிப்படை விதிகளில் 56ஜே என்ற விதியை பயன்படுத்தி, 12 வருமான வரித் துறை உயர் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் செல்லுமாறு தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 12 அதிகாரிகளும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள். பொது நலன் என்ற காரணத்தைக் காட்டி உடனடியாக பணியில் இருந்து விலகிச் செல்லுமாறு இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிலும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சஸ்பெண்டில் இருக்கும் ஸ்ரீவத்சவா, முன்னாள் அமலாக்கப்பிரிவு இயக்குனர் அசோக் அகர்வால் ஆகியோருக்கு ஓய்வூதியப் பலன்களும் தரப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களைத் தவிர தமிழகத்தில் வருமான வரி ஆணையராக உள்ள ஹோமி ராஜ்வன்ஸ், கூடுதல் ஆணையராக உள்ள விவேக் பத்ரா, குஜராத்தில் உள்ள வருமான வரி ஆணையர் மற்றும் ராஜேந்திர பிரசாத்,

அலோக்குமார் மித்ரா(கொச்சி), அஜய்குமார் சிங்(கொல்கத்தா), அருளப்பா(கொச்சி), ரவீந்தர்(கூடுதல் ஆணையர் புவனேஸ்வர்), சந்தர்சைன் பார்தி(கூடுதல் ஆணையர் அலகாபாத்), ராம்குமார் பார்கவா(கூடுதல் ஆணையர் லக்னோ) ஆகியோர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் அதிகாரிகளுக்கு தயவு தாட்சண்யம் காட்டப்படாது என்று மோடி அரசு மறைமுகமாக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

You'r reading 12 வருமான வரி கமிஷனர்களை வீட்டுக்கு அனுப்பியது மத்திய அரசு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொள்கைகளை வகுப்பதில் மக்களின் பங்களிப்பு அவசியம்; அதிகாரிகளுக்கு மோடி அறிவுறுத்தல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்