என்னை சஸ்பென்ட் செய்தது ராகுல் காந்திக்கு தெரியுமா?- கராத்தே தியாகராஜன் சரமாரி கேள்வி

Karate thiagarajan questions Congress leaders for his suspension from party

உள்நோக்கத்துடனே என்னை கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தெரிந்து தான் நடந்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ள கராத்தே தியாகராஜன், கடைசி வரைக்கும் காங்கிரஸ்காரனாகவே இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கராத்தே தியாகராஜன், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்த இந்தக் கருத்தால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியின் சிபாரிசின் பேரில் கட்சியின் பொதுச் செயலாளர் கே.எஸ்.வேணுகோபால், கராத்தே தியாகராஜனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், இன்று அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை ஙங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த கராத்தே தியாகராஜன்,
காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் நான் பேசிய கருத்தையே மாவட்டச் செயலாளர்கள் பலரும் கூறினர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என் மீது மட்டும் ஏன் இத்தனை அழுத்தம் கொடுக்கின்றனர். இதற்கு ஏதோ உள்நோக்கம் உள்ளது. நான் பேசிய கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரியும் இருந்தார். அப்போதே அவர் ஏன் என் பேச்சை கண்டிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி மோடியை ஆதரித்து விஜயதரணி எம்எல்ஏ பேசினார். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு திமுக மீது பழிபோடுகிறார்கள். ஆனால் உண்மையில் கே.எஸ்.அழகிரிக்கு தெரிந்து தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அதனை சொல்லாமல் திமுக மீது பழிபோடுகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு என்றுமே நான் விசுவாசமாக இருப்பேன். அவருக்குத் தெரிந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இல்லை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபாலே இந்த நடவடிக்கையை எடுத்தாரா? எனத் தெரியவில்லை. ப.சிதம்பரத்தை மதிக்கிறேன். நான் என்றுமே ராகுல்காந்தியின் விசுவாசி. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அவரின் இரத்தத்தை பார்த்தவன் நான். என்றுமே காங்கிரஸ்காரனாகவே இருப்பேன் என கராத்தே தியாகராஜன் தனது குமுறலை வெளிப்படுத்தினார்.

ஸ்டாலின் மருமகனுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி?

You'r reading என்னை சஸ்பென்ட் செய்தது ராகுல் காந்திக்கு தெரியுமா?- கராத்தே தியாகராஜன் சரமாரி கேள்வி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தங்கமா, பித்தளையா? தமிழிசை கிண்டல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்