காஷ்மீர் உள்நாட்டு விவகாரம், பாகிஸ்தான் தலையிட முடியாது ராகுல்காந்தி தெளிவு!

Rahul Gandhi says Kashmir internal matter, Pakistan prime supporter of terror

காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பாகிஸ்தானோ வேறு நாடுகளோ தலையிட முடியாது என்று ராகுல்காந்தி தெளிவுபட கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவை ஆக.5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம், ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதால், முன்கூட்டியே முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு இன்னமும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் தகவல் தொடர்பு சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, ஸ்ரீநகர் உள்பட 22 மாவட்டங்களிலும் 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இன்னும் காஷ்மீரில் நிலைமை சீரடையவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசை ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், கடந்த வாரம் காஷ்மீருக்கு சென்ற ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், ராகுல்காந்தி இன்று தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நான் மத்திய அரசின் பல்வேறு முடிவுகளை ஏற்கவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். காஷ்மீர் விவகாரம், இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. இதில் பாகிஸ்தானோ, வேறு நாடுகளோ தலையிட முடியாது.

காஷ்மீரில் வன்முறைச் செயல்கள் நடைபெறுகின்றன. அதற்கு காரணம், அவை பாகிஸ்தான் அரசால் தூண்டி விடப்படுகிறது. உலக அளவில் பயரங்கவாதச் செயல்களை ஆதரிக்கும் முக்கியமான நாடாக பாகிஸ்தான் இருக்கிறது.
இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.

காஷ்மீர் அவலம் எத்தனை நாள் தொடரும்? வீடியோவை பதிவிட்டு பிரியங்கா காட்டமான கேள்வி

You'r reading காஷ்மீர் உள்நாட்டு விவகாரம், பாகிஸ்தான் தலையிட முடியாது ராகுல்காந்தி தெளிவு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - லண்டன் புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி ; தமது பயணத்தை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக குற்றச்சாட்டு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்