கபடி மாஸ்டர்ஸ் 2018- அரையிறுதியில் இந்தியா!

உலகின் முன்னணி 6 நாடுகள் பங்கேற்கும் கபடி மாஸ்டர்ஸ் 2018 போட்டிகள் துபாயில் நடந்து வருகிறது.

லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேற்று இரண்டாவது முறையாக மோதின. இதில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை சுலபமாக வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டி தொடங்கியது முதலே இந்திய அணியின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. குறிப்பாக டேக்கல் மற்றும் ரெய்டு ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இந்திய அணி, கில்லி போல ஆடியது. இந்தியத் தரப்பில் கேப்டன் அஜய் தாக்கூர், ரோகித் குமார் மற்றும மோனு கோயத் ஆகியோர் ரெய்டிங்கில் இந்திய அணிக்கு அதிக புள்ளிகளைப் பெற்றுத் தந்தனர்.

அதே நேரத்தில், டேக்கலிங்கில் இந்திய அணி சார்பில் கிரிஷ் எர்னாக் அதிகபட்சமாக 5 புள்ளிகள் பெற்றார். இதனால், ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 41 புள்ளிகள் எடுத்திருந்தது. அதே நேரத்தில் பாகிஸ்தான் வெறும் 17 புள்ளிகள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த சுலபமான வெற்றியால், இந்திய அணி கபடி மாஸ்டர்ஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தான் அணி, இந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும் தனது அடுத்த ஆட்டத்தில் கென்யாவை வீழ்த்தினால் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே மோதின. அந்தப் போட்டியிலும் இந்தியா சுலபமான வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

You'r reading கபடி மாஸ்டர்ஸ் 2018- அரையிறுதியில் இந்தியா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமெரிக்காவைவிட்டு வெளியேறுகிறது ஹார்லி டேவிட்சன்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்