`தொடர்ச்சியான ஊழல் புகார்கள் 3ம் ஆண்டு தொடக்க நாளில் அதிரடி - தூக்கியடிக்கப்பட்ட தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்!

ias officers transferred in tamilnadu

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை போக்குவரத்துத் துறைக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி காட்டியுள்ளது.

தமிழக அரசிடம் இருந்து இன்று மாலை முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தான். இடமாற்றங்கள் வழக்கம் தான் என்றாலும் இந்த முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருந்தவர்களும், முக்கிய பதவிகளில் இருந்து அரசாங்கத்தில் மறைமுகமாக கோலாச்சி வந்தவர்களும் தான். அதன்படி, தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளராக ஜெயலலிதா காலத்தில் இருந்து தற்போது வரை எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் ராதாகிருஷ்ணன். இவர் இந்தப் பதவிக்கு அமரவைக்கப்பட்டதற்கு காரணம் இவர் 2004ம் ஆண்டு சுனாமி பாதித்த நன்றாக பணிபுரிந்தார் என்பதை தாண்டி இவர் ஒரு மருத்துவர் என்பதால் பதவி தேடி வந்தது.

தனக்கு கிடைத்த பதவியை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர் ராதாகிருஷ்ணன் முதல்வர்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடம் காட்டிய நெருக்கமே இத்தனை வருடங்களாக ஒரே பதவியில் அமர வைத்தது. இந்தநிலையில் தான் இவரை தற்போது சுகாதாரத்துறையில் இருந்து போக்குவரத்துத் துறைக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி காட்டியுள்ளது. இதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையராகவும், ஆளுங்கட்சி வட்டாரத்தில் அமைச்சர் வேலுமணி அமைச்சர் வேலுமணி ஆதரவாளராகவும் அறியப்பட்டவர் கார்த்திகேயன். இவரை தற்போது நகராட்சி நிர்வாக ஆணையராக இடமாற்றம் செய்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு ஐ.ஜியாக இருந்த குமரகுருபரன் பேரிடர் மேலாண்மை இயக்குநராகவும், கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஹரிஹரன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை சிறப்பு செயலாளராகவும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், இந்திய மருத்துவம், ஹோமியோபதி இயக்குநராகவு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை போலவே, வணிகவரித்துறை முதன்மை செயலாளர் பாலச்சந்திரன், பதிவுத்துறை ஐஜி ஆகவும், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை ஆட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சுகாதாரத்துறை செயலாளராக பீலா ராஜேஷ் என்பவரும், திருச்சி மாவட்ட ஆட்சியராக எஸ்.சிவராசுவும், ஐஏஎஸ் அதிகாரி நாகரஜனுக்கு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையராகவும், கோவை மாநகராட்சி ஆணையர் கே.விஜயகார்த்திகேயன் தமிழ்நாடு ஊரக கல்வி நிறுவன இயக்குநராகவும், தமிழ்நாடு குடிநீர், வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த், திருவாரூர் ஆட்சியராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான ஊழல் புகார்கள், ஆளுங்கட்சிக்கு எதிர் மற்றும் ஆதரவு மனநிலை உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டும், மக்களவை தேர்தல் நடைபெற உள்ள இந்தச் சூழலில் நிகழ்ந்துள்ள இந்த அதிரடி மாற்றம் தமிழக அரசு நிர்வாகத்துறையில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளது. தொடர்ச்சியான ஊழல் புகார்களை கண்காணித்து வந்த இவர் தனது மூன்றாம் ஆண்டு தொடக்க தினத்தில் இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்து அதிகாரிகளை மிரளவைத்துடன், தான் ஒரு வலுவான முதல்வர் என்பதை கூறும் விதமாக நாளுக்கு நாள் அரசாங்கத்தில் கோலாச்சி வருகிறார் எடப்பாடி. இனி இதுபோல் நிறைய மாற்றங்கள் எடப்பாடியிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்கின்றன அரசு வட்டாரங்கள்.

You'r reading `தொடர்ச்சியான ஊழல் புகார்கள் 3ம் ஆண்டு தொடக்க நாளில் அதிரடி - தூக்கியடிக்கப்பட்ட தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சில்லி சீஸ் வெங்காய தோசை ரெசிபி..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்