காந்தியே ஹே ராம் சொன்னவர்தான்.. நடிகர் சிவக்குமார் திடீர் விளக்கம்
Even Gandhi worships ram, says sivakumar
எல்லா மதத்தையும் சமமாக மதித்த மகாத்மா காந்தியே சாகும் போது ஹே ராம் என்று சொன்னவர்தான் என நடிகர் சிவக்குமார் திடீர் விளக்கம் கொடுத்துள்ளார்.
சமீப காலமாக நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. சிவக்குமார் மகன் சூர்யா, இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டதாகவும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. கார்த்தி நடிக்கும் சுல்தான் படம், திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடந்த போது, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியினர் வந்து படப்பிடிப்பை நடத்த விடாமல் தடுத்தனர். திப்பு சுல்தான் படத்தை இங்கு எடுக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் படப்பிடிப்புக்குழுவினர், இது திப்பு சுல்தான் வரலாற்று படம் அல்ல என்று விளக்கம் கொடுத்தும் ஏற்கவில்லை. அவர்கள் நடிகர் சிவக்குமாரையே நாத்திகர் என்று குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, நடிகர் சிவக்குமார் தானே பேசி, ஒரு
வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா? சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், விநாயகர், லக்ஷ்மி, சரஸ்வதி, காமாட்சி, மீனாக்ஷி என சாமி கும்பிடுபவர்கள் நம் நாட்டில் பல கோடி பேர் இருக்கிறார்கள். அல்லாவையும், ஏசுவையும் கும்பிடுபவர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள். கடவுளுக்கு வடிவம் கிடையது. ஆண், பெண் பாகுபாடு இல்லை. கடவுள் என்பது உணரக் கூடிய விஷயம். விவாதம் செய்யக்கூடிய விஷயமல்ல என்று சொன்னவர் மகாத்மா காந்தி. ஆனால், அவரே உயிர் துறக்கும்போது ஹே ராம் என்று சொன்னதாக வரலாறு சொல்கிறது. அவர் ராமனை வணங்கியிருக்கிறார்.
நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், என்னுடைய அப்பா முருக பக்தர். ஒவ்வொரு கிருத்திகைக்கும் உபவாசம் இருந்து பழனி மலைக்குச் சென்று திருப்புகழ் மொத்தப் பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்லி சாமி கும்பிட்டு விட்டு திரும்பி வருவார். நானும் முருக பக்தன். ஐந்து வயதிலிருந்தே முருகன் படத்தை வைத்து சாமி கும்பிட்டு வருகிறேன். இப்போதும் கூட எங்கள் வீட்டுப் பூஜை அறையில் எல்லா சாமி படங்களும் இருக்கின்றன. இந்திய மண்ணுக்கு பெருமை சேர்ப்பது ராமாயணம், மகாபாரதம் என்ற 2 காப்பியங்கள்தான்.
5000 பேருக்கு முன்னிலையில், அந்த மாபெரும் காப்பியங்களின் முழுக்கதையையும் பாடல்கள் பாடி உரை நிகழ்த்தியிருக்கிறேன். யூடியூப்பில் இப்போதும் அதை நீங்கள் பார்க்கலாம். உண்மையான பக்தி என்பது, அடுத்தவரை நேசித்தல், அவர்களை சமமாக மதித்தல், இல்லாதவர்கள், முடியாதவர்களுக்கு ஓடிச்சென்று உதவி செய்தல் ஆகியவைதான். இதைச் செய்பவன்தான் உண்மையான பக்திமான். உயர்ந்த பக்திமான்! எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கின்றன.
இவ்வாறு சிவக்குமார் கூறியுள்ளார்.
You'r reading காந்தியே ஹே ராம் சொன்னவர்தான்.. நடிகர் சிவக்குமார் திடீர் விளக்கம் Originally posted on The Subeditor Tamil