சென்னையில் வேகமாக பரவும் கொரோனா.. 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

corona cases in chennai incrases to 9987.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தொடுகிறது.சீன வைரஸ் நோயான கொரோனா வைரஸ், இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் அதிகமாகப் பரவியிருக்கிறது.


தமிழகத்தில் நேற்று(மே23) மட்டும் புதிதாக 759 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்த 49 பேரும் அடக்கம். பிலிப்பைன்சில் இருந்து வந்த 5 பேருக்கும், லண்டனிலிருந்து வந்த 7 பேருக்கும் கொரோனா பாதிப்பு தெரியவந்திருக்கிறது. மேலும், மகாராஷ்டிரா 24, டெல்லி 1, மேற்குவங்கம் 3, ராஜஸ்தான் 6, உ.பி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தலா ஒருவருக்கு என்று மொத்தம் 49 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது.தற்போது மாநிலம் முழுவதும் 15,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 363 பேரையும் சேர்த்து மொத்தம் 7491 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 5 உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, அதிகளவில் கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று 11872 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் 3 லட்சத்து 97,340 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில்தான் தொடர்ந்து நேற்றும் புதிதாக 624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 9987 ஆக அதிகரித்துள்ளது. இது தவிரச் செங்கல்பட்டில் 39 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும், திருவள்ளூரில் 17 பேருக்கும், திருவண்ணாமலையில் 6 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் மூலமும், அடுத்ததாக கோயம்பேடு மார்க்கெட் மூலமும் கொரோனா பரவியிருந்தது. தற்போது மகாராஷ்டிரா உள்படப் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் மூலமாக கொரோனா பரவி வருகிறது. சென்னை தவிரப் பிற மாவட்டங்களில், வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே இப்போது கொரோனா தொற்று காணப்படுகிறது. மற்றபடி அந்த மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக இல்லை.ஆனாலும், சென்னையில் தொடர்ந்து தினமும் 600 பேருக்கு மேல் கொரோனா பரவி வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading சென்னையில் வேகமாக பரவும் கொரோனா.. 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை.. எடப்பாடி பழனிசாமி பதில்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்