சென்னையில் 10,576 பேருக்கு கொரோனா பாதிப்பு.. வைரஸ் பரவல் அதிகரிப்பு
corona cases in chennai crosses 10500.
சென்னையில் இது வரை 10,576 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. தொடர்ந்து வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் அதிகமாகப் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தினமும் புதிதாக 600, 700 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று(மே24) மட்டும் புதிதாக 765 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்த 47 பேரும் அடக்கம்.
துபாய், பிலிப்பைன்ஸ், லண்டனிலிருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. மேலும், மகாராஷ்டிரா 39, டெல்லி 1, மேற்குவங்கம் 2, கேரளா, கர்நாடகாவிலிருந்து வந்த தலா ஒருவர் என 47 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது.
தற்போது மாநிலம் முழுவதும் 16,277 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 833 பேரையும் சேர்த்து மொத்தம் 8324 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 8 உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, நேற்று 11,441 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில்தான் தொடர்ந்து அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 10,576 ஆக அதிகரித்துள்ளது.
இது தவிரச் செங்கல்பட்டில் 46 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 21 பேருக்கும், திருவள்ளூரில் 34 பேருக்கும், திருவண்ணாமலை, தேனி, கடலூரில் தலா 4 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.தற்போதைய நிலவரப்படி, அதிகபட்சமாகச் சென்னையில் 10,576, செங்கல்பட்டில் 779, திருவள்ளூர் 731, கடலூர் 427, அரியலூர் 356, காஞ்சிபுரம் 285, திருவண்ணாமலை 282 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.
You'r reading சென்னையில் 10,576 பேருக்கு கொரோனா பாதிப்பு.. வைரஸ் பரவல் அதிகரிப்பு Originally posted on The Subeditor Tamil