மதுரை, சேலத்தில் மீண்டும் கொரோனா பரவல்?

தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 600க்கு கீழ் குறைந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிகமானோருக்கு நோய் பாதித்தது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று நோய், அக்டோபர் மாதத்திற்குப் பிறகு குறையத் தொடங்கியது.

தினமும் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தாலும், நோய் பரவல் முழுமையாகக் கட்டுப்படவில்லை. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் தினமும் 500க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதித்து வருகிறது. தமிழக அரசு நேற்று(ஜன.21) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, புதிதாக 596 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களைச் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 33,011 ஆக உயர்ந்தது.

மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 705 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 15,516 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 9 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,299 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5146 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். தினமும் சராசரியாக 700 பேர் குணம் அடைந்து வருவதாலும், புதிய பாதிப்பு 600க்கு கீழ் குறைந்து வருவதாலும் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று புதிதாக 166 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 72 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 18 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 59 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மதுரை, சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த வாரத்தில் புதிய பாதிப்பு 20க்கும் குறைவாகக் காணப்பட்டது. ஆனால் நேற்று(ஜன.21) மதுரையில் 23 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 24 பேருக்கும், சேலத்தில் 27 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் புதிதாகத் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

You'r reading மதுரை, சேலத்தில் மீண்டும் கொரோனா பரவல்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கர்நாடகா கல்குவாரியில் பயங்கர குண்டுவெடிப்பு.. 8 பேர் பரிதாபச் சாவு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்