கொங்கு மண்டலத்தில் கொரோனா நோய் பரவல் நீடிப்பு..

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 4600 ஆக குறைந்துள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் மாநிலம் முழுவதும் தினமும் 5 ஆயிரம், 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்து பெரும் பீதியை ஏற்படுத்தியது. தினமும் 200, 300 பேர் இந்த நோய்க்கு பலியாயினர். கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு குறையத் தொடங்கியது. தற்போது தினமும் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தாலும், நோய் பரவல் முழுமையாக கட்டுப்படவில்லை. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 50 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் தினமும் 500க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதித்து வருகிறது.

தமிழக அரசு நேற்று(ஜன.29) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, 52 ஆயிரம் பரிசோதனைகள் செய்ததில் புதிதாக 509 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்களை சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 37,327 ஆக உயர்ந்தது.

மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 531 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 20,381பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 6 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,345 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4601 பேராக குறைந்துள்ளது. புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 500 ஆக குறைந்து வருவதாலும் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 5000க்கும் கீழ் சென்றுள்ளது.

சென்னையில் நேற்று புதிதாக 148 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 48 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 21 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. அதே போல், கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் 57 பேருக்கும் திருப்பூர் மாவட்டத்தில் 28 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 21 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 20 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
மற்ற மாவட்டங்களில் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15க்கும் கீழ் குறைந்துள்ளது.

You'r reading கொங்கு மண்டலத்தில் கொரோனா நோய் பரவல் நீடிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - துரோகி, பச்சோந்தி, பதவிவெறியர்.. முதல்வரை திட்டும் நமது எம்ஜிஆர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்