தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 4354 பேர்..

தமிழகத்தில் தற்போது 4354 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். நேற்று(பிப்.8) ஒரே நாளில் புதிதாக 464 பேருக்கு நோய் பாதித்திருக்கிறது. இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த வைரஸ் நோய் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்து பெரும் பீதியை ஏற்படுத்தியது. தினமும் 100, 200 பேர் இந்த நோய்க்குப் பலியாயினர். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நோய்ப் பரவுவது குறையத் தொடங்கியது.

ஆனாலும், சென்னை, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நோய் பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுப்படவில்லை.தமிழக அரசு நேற்று(பிப்.8) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, 51,613 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ததில் புதிதாக 464 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 42,261 ஆக உயர்ந்தது.மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 495 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 25,540 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 4 பேர் பலியானார்கள்.

இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,387 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4354 ஆகக் குறைந்துள்ளது.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கொரோனா பரவுவது நீடிக்கிறது. சென்னையில் நேற்று புதிதாக 143 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 49 பேருக்கும், செங்கல்பட்டு 28 பேர், திருவள்ளூர் 21 பேர், திருச்சி 26, காஞ்சிபுரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தலா 18 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 15க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

You'r reading தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 4354 பேர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெங்களூருவில் இருந்து 23 மணி நேர பயணம்.. சென்னை வந்தார் சசிகலா..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்